பள்ளிகளில் பாலியல் சார்ந்த துன்புறுத்தல், அச்சுறுத்தல் குறித்து மாணவர்கள் புகார் அளிக்கலாம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
சென்னை: பாதுகாப்பற்ற சூழலில் இருந்தாலும் மாணவர்கள் 14417 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு மற்றும் உயர்கல்விக்கு வழிகாட்டுதல் தேவை என்றாலும் 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மாணவர்கள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டால் புகார் தெரிவிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.இந்நிலையில் கல்வி தொடர்பாக மாணவ மாணவிகளுக்கு ஏற்படும் எந்தவிதமான சந்தேகங்களையும் கேட்டுத் தெளிந்து கொள்ள கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு 24 மணி நேர இலவச வழிகாட்டி மையம் தொடங்கப்பட்டது. 14417 என்ற இலவச எண்ணுக்கு அழைத்து மாணவர்கள் விளக்கங்களைப் பெறலாம் என்று அப்போது அறிவிக்கப்பட்டது. பெரும்பாலும் கல்வி உதவித்தொகை, மேற்படிப்புக்கான வழிகாட்டுதல் ஆகியவற்றுக்காக இந்த மையத்துக்கு அழைப்புகள் வருவது வழக்கம்.
தமிழ்நாட்டில் பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகிவரும் நிலையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் கல்வி வழிகாட்டி மையத்துக்கான 14417 என்ற இலவச எண்ணிலேயே மாணவ மாணவிகள் 24 மணி நேரமும் தங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம். ரகசியம் காக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

