செங்கல்பட்டு: படூரில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் பணியாற்றும் சக பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக பேராசிரியர் சஞ்சு ராஜு (36) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை படூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் சஞ்சுராஜ் என்பவர் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அதே கல்லூரியில் கணினி அறிவியல் பாடம் கற்பிக்கும் பெண் பேராசிரியர் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.
இதையறிந்த சக பேராசிரியர்கள் கல்லூரி வளாகத்திலேயே சஞ்சுராஜுவை தாக்கியுள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும் தெரியவந்ததையடுத்து மாணவர்களும் அந்த பேராசிரியரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பேராசிரியரை, சக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

