Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மெஞ்ஞானபுரம் அருகே போலீஸ்காரர் தாய் கொலையில் இளம்பெண் கைது

உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள தேரிப்பனை சிஎஸ்ஐ கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி வசந்தா (70). அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர்களுக்கு சபிதா என்ற மகளும், வினோத், விக்ராந்த் ஆகிய இரு மகன்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. விக்ராந்த், சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். அனைவரும் வெளியூர்களில் உள்ளதால் வசந்தா மட்டும் தேரிப்பனையில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை அவர், நீண்டநேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து விக்ராந்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர், வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு மற்றும் ஜன்னல்கள் பூட்டப்பட்டு இருந்தது. ஆனால் பின்பக்க வாசல் கதவு மட்டும் திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கு வசந்தா தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்திருந்த 9 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது.

தகவல் அறிந்து எஸ்பி ஆல்பர்ட்ஜான், ஏடிஎஸ்பி திபு, டிஎஸ்பிக்கள் சுபகுமார், மகேஷ் குமார் மற்றும் மெஞ்ஞானபுரம் போலீசார் சென்று உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குபதிந்து அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அதேபகுதியைச் சேர்ந்த இளம்பெண் செல்வரதி (24) என்பவர் மட்டும் மாயமாகியிருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சந்தேகம் அடைந்த போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலை அவர், போலீஸ் பிடியில் சிக்கினார்.

இதைத்தொடர்ந்து செல்வரதியை போலீசார் கைது செய்தனர். கொலையான வசந்தாவும், இவரும் அதேபகுதியில் அருகருகே வசித்து வருவதால் இவர்களுக்குள் ஏதேனும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா அல்லது நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் செல்வரதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்வரதி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியாக இருந்த போது அதேபகுதியைச் சேர்ந்த பச்சிளங்குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.