சென்னை: பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தில் அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னையின் 2வது விமான நிலையம், காஞ்சிபுரம் பரந்தூரில் 20 கிராமங்களை உள்ளடக்கி 5,746 ஏக்கரில் அமைகிறது. தற்போது நிலத்தை கையகப்படுத்தும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது. பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிகளை மாநில அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் (டிட்கோ) மேற்கொண்டு வருகிறது.
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக திட்ட அனுமதிக்காக விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்திடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இதனை பரிசீலித்த ஆணையம் திட்ட அனுமதிக்கான கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தில் அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த கூட்டத்தில், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில்துறை அதிகாரிகள், டிட்கோ அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.



