Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வரும் நிதியாண்டில் மாநில அரசின் சொந்த வரி வருவாய் ரூ.2.4 லட்சம் கோடியாக அதிகரிக்கும்

சென்னை: வரும் நிதியாண்டில் மாநில அரசின் சொந்த வரி வருவாய் ரூ.2.4 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என பட்ஜெட் உரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். 2024-25 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 195,173 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட மாநிலத்தின் சொந்த வரி வருவாய், திருத்த மதிப்பீடுகளில் 192752 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 220,895 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இது. வணிகவரிகளின் கீழ் 163,930 கோடி ரூபாய், முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவுக் கட்டணங்களின் கீழ் 26,109 கோடி ரூபாய், வாகனங்கள் மீதான வரிகளின் கீழ் 13,441 கோடி ரூபாய் மற்றும் மாநில ஆயத்தீர்வையின் கீழ் 12944 கோடி ரூபாய் வரி வருவாய் மதிப்பீடுகளை உள்ளடக்கியதாகும். மாநிலப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, வரி விகிதங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், வரி வசூல் திறனில் முன்னேற்றம் ஆகியவற்றின் பலனாக மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 2025-26 ஆம் ஆண்டில் 14.60 சதவீத வளர்ச்சி பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2024-25 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 30,728 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட மாநிலத்தின் சொந்த வரியல்லாத வருவாய் திருத்த மதிப்பீடுகளில் 28,124 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநிலத்தின் சொந்த வரியல்லாத வருவாய் 28,819 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, 2025-26 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநிலத்தின் சொந்த வருவாய் மதிப்பீடான 249,713 கோடி ரூபாய் மொத்த வருவாய் வரவுகளில் 75.31சதவீதத்தைக் கொண்டிருக்கும்.

அரசின் பெருமுயற்சிகளால் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் உயர்ந்து வரும் அதே வேளையில், ஒன்றிய அரசிடமிருந்து வரப்பெறக்கூடிய உதவி மானியங்கள், ஒன்றிய வரிகளில் பங்கு ஆகியவை மொத்த வருவாய் சதவீதத்தில் குறைந்துகொண்டே வந்துள்ளன. ஒன்றிய அரசு. ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்தின் கீழ் நிதியை விடுவிக்காமல் நிறுத்தி வைத்ததும், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதியை விடுவிக்க மறுத்ததும், மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பெருவெள்ளம் ஆகிய இரு தொடர் பேரிடர்களின் நிவாரணப் பணிகளுக்கு தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மிகச் சொற்பமான 276 கோடி ரூபாயை மட்டுமே விடுவித்ததும் மாநில அரசின் நிதிநிலையை வெகுவாகப் பாதித்துள்ளது.

2024-25 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 23354 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட ஒன்றிய அரசிடமிருந்து பெறப்படும் உதவி மானியங்கள். திருத்த மதிப்பீடுகளில் 20,538 கோடி ரூபாயாக கணிசமான அளவிற்கு குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் முழு பங்குத்தொகையை ஒன்றிய அரசு வரும் நிதியாண்டில் விடுவிக்கும் எதிர்பார்த்து. ஒன்றிய அரசிடமிருந்து வரப்பெறக்கூடிய உதவி மானியங்கள் 2025-26 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 23,834 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று கூறினார்.