நெல்லை:நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்ஐ ஜாகீர் உசேன் பிஜிலி தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என வீடியோ வெளியிட்டு சில நாட்களில் அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், ஓபிஎஸ் அணி நிர்வாகி ஒருவரும் அதுபோல் வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதன்விவரம் வருமாறு: நெல்லை மாவட்டம் பேட்டை அருகே குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகுரு (55). ஓபிஎஸ் அணியில் ஊராட்சி செயலாளராக உள்ளார். இவரது மனைவி கிருஷ்ணவேணி, வங்கி ஊழியர். இந்நிலையில் துப்புரவு பணியாளர் ஒருவரை ராஜகுரு தாக்கியதாக அளித்த புகாரின் பேரில் போலீசார் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜகுருவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த ராஜகுரு, தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசனுக்கு வீடியோ மூலம் இணையதளம் வாயிலாக புகார் தெரிவித்து உள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த புகாரில் அவர் கூறுகையில், ``எனது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தற்போது உள்ளது. எனது உயிருக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் 3 பேர் தான் காரணம்’’ என தெரிவித்து உள்ளார்.
இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் சிஎஸ்ஆர் பதிவு செய்தனர். சேரன்மகாதேவி டிஎஸ்பி சத்தியராஜ் தலைமையிலான போலீசார் ராஜகுரு உட்பட இரு தரப்பினரையும் நேரில் அழைத்து விசாரணை நடத்தி எச்சரித்து அனுப்பினர்.
