Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

என்ன இடையூறு வந்தாலும், விளையாட்டு வீரர்கள் விடாமுயற்சியை கைவிடாதீர்கள்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: என்ன இடையூறு வந்தாலும், விளையாட்டு வீரர்கள் விடாமுயற்சியை கைவிடாதீர்கள், உங்களுக்கு முதலமைச்சர் அவர்களும், திராவிட மாடல் அரசும், விளையாட்டுத்துறையும் உறுதுணையாக இருக்கின்றார்கள் என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உறுதிமொழி அளித்துள்ளார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற 2024 - 2025 ஆம் கல்வியாண்டில் சர்வதேச, தேசிய, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சார்ந்த மாணவ. மாணவிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கும் விழாவில் துணை முதல்வர் உரையாற்றினார்.

மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்குகின்ற இந்த விழாவில் பங்கேற்று, உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன், பெருமையடைகின்றேன்.

பள்ளிகளில் இருந்து விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டுவது என்பது மிக, மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும். இதனைத் தொடர்ந்து செய்து வருகின்ற பள்ளிக்கல்வித்துறைக்கு முதலில் என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த துறை இப்படிச் செய்வது, தொடர்ந்து இதை செய்வது ஒரு விளையாட்டுத் துறையினுடைய அமைச்சராக எனக்கு கூடுதல் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் எனக்கு கொடுத்துக் கொண்டே இருக்கின்றீர்கள். தமிழ்நாட்டில் இருந்து இளம் விளையாட்டு வீரர்களை அடையாளம் காண்பதற்கு, இது போன்ற நிகழ்ச்சிகள் மிகப்பெரிய அளவில் கைகொடுக்கின்றன.

பாடப் புத்தகத்தில், பாடத்திட்டத்தில் (Syllabus) இருந்து கிடைக்கின்ற கல்வி மட்டுமல்ல, விளையாட்டின் மூலமும் நிறைய விஷயங்களை மாணவர்கள் நீங்கள் கற்றுக் கொள்ள முடியும். கூட்டுறவு, குழுப்பணி, நம்பிக்கை, நட்பு, உத்தி, திட்டமிடல், செயல்படுத்தல் (Co-Operation, Team Work, Confidence, Friendship, Strategy, Planning, Execution,) என வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை குணங்களையும் நமக்கு விளையாட்டு (Sports) நமக்கு கற்றுக் கொடுக்கிறது.

சாதாரணமாக பாடப்புத்தகத்தை மட்டும் படிக்கிற போது, இதையெல்லாம் கற்றுக் கொள்ள முடியாது. எனவே, படிப்பிலும், விளையாட்டிலும் ஈடுபடக் கூடிய மாணவர்கள் நீங்கள் எப்போதுமே தனிச் சிறப்போடு இருப்பீர்கள்.

கல்வியிலும் கவனம் செலுத்த வேண்டும், அதே நேரத்தில் விளையாட்டிலும் உங்களுடைய கவனம் இருக்க வேண்டும். விளையாட்டு என்றால், தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி அந்த நேரத்தில் தவறாமல் நீங்கள் பயிற்சி செய்ய வேண்டும். எப்போதாவது விளையாட்டு மைதானம் பக்கம் தலைகாட்டினால் போதுமென்று மட்டும் இருந்து விடக்கூடாது.

நீங்கள் தொடர்ந்து பயிற்சி செய்யும்போது, கொஞ்சம் கொஞ்சமாக உங்களுடைய திறமை உங்களை அறியாமலேயே அது கூடிக்கொண்டே போகும். நீங்கள் அடுத்தடுத்த உயரங்களை தொடுவதற்கு தொடர்ந்து நீங்கள் பயிற்சி செய்ய வேண்டும். மென்மேலும் போட்டிகளில் அதிகமாக பங்கேற்க வேண்டும்.

விளையாட்டைப் பொறுத்தவரைக்கும் வெற்றி எவ்வளவு முக்கியமோ விடாமுயற்சியும் அதே அளவுக்கு முக்கியம். 1992-ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் எத்தனையோ பேர் பதக்கங்களை வென்றிருப்பார்கள். ஆனால், 1992 ஒலிம்பிக்ஸ் என்று சொன்னாலே ஒருத்தருடைய பேர் நாம் அத்தனை பேருக்குமே நினைவிற்கு வரும், அவருடைய பேர் தான் பிரிட்டிஷ் ஓட்டப்பந்தய வீரர் டெரிக் ரெட்மன்டின் என்பவருடைய பெயர். அவர் பதக்கம் வெல்லவில்லை. ஆனால் அவரை ஏன் எல்லோருக்கும் தெரிகிறது என்றால், அந்த ஒலிம்பிக்கில் அவர் வெளிப்படுத்திய விடாமுயற்சி என்பது தான் அதற்கு காரணம்.

அந்த ஒலிம்பிக்ஸ்ல் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஓடும்போது, பாதி தூரத்தில் ஓடிக்கொண்டு இருக்கும் போதே அவருக்கு கடுமையான தசை பிடிப்பு (Hamstring Muscles Cramp) ஆகிவிட்டது. அதனால், அதற்கு மேல் அவரால் ஓட முடியவில்லை. ஓட முடியாமல் இருந்தாலும், தன்னுடைய கால்களால் நொண்டிக் கொண்டே இலக்குவரை செல்வதற்கு முயற்சி செய்தார்.

அதைப் பார்த்த அவருடைய அப்பாவும் ஆடியன்ஸ்லிருந்து வெளியில் ஓடி வந்து தன்னுடைய மகன் கையைப்பிடித்து கொண்டு அவரும் ஓடுவதற்கு முயற்சி செய்தார். அங்கே இருந்த பாதுகாவலர்கள் அவர்களை பந்தைய பாதையை (Track) விட்டு வெளியில் போக சொன்னார்கள்.

அப்போது அவர் அப்பாவும் மகனும் சொன்னார்கள் “எங்களை விட்டுவிடுங்கள், Track-இல் நாங்கள் ஓட வேண்டும். எங்களுடைய லட்சியம் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமல்ல. இலக்கை அடைந்திடவிட வேண்டும் என்பது தான். அவர்கள் சொன்னது, “We don’t want to win, but we want to finish the race” என்று சொன்னார்கள். ரெட்மன்டை கடைசிக் கோடு வரை கொண்டு வந்து சேர்த்தவர் அவருடை அப்பா.

டெரிக் ரெட்மன்டின் இந்த விடாமுயற்சியையும், உறுதியையும் பார்த்து, மைதானத்தில் இருந்த லட்சக்கணக்கான பார்வையாளர்கள் எழுந்து நின்று, அவர்கள் இரண்டு பேருக்குமே Standing Ovation கொடுத்தார்கள். இதை நான் இங்கே எதற்காக சொல்கிறேன் என்றால், வெற்றிகள் மட்டும் தான் வரலாற்றில் நிலைக்கும் என்று கிடையாது. சில நேரங்களில், விடாமுயற்சியும் வரலாற்றில் நிலைக்கும் என்பதற்கு டெரிக் ரெட்மண்ட் தான் மிகச் சிறந்த உதாரணம்.

ஆகவே, என்ன இடையூறு வந்தாலும், உங்களுடைய விடாமுயற்சியை நீங்கள் தயவு செய்து கைவிடாதீர்கள். உங்களுக்கு அனைத்து வகையிலும், துணை நிற்க நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், நம்முடைய திராவிட மாடல் அரசும், நம்முடைய விளையாட்டுத்துறையும் இருக்கிறது. நானும் என்றைக்கும் உங்களுடைய குடும்பத்தில் ஒருத்தனாக, உங்களுடைய அண்ணனாக உங்களுடைய எல்லா முயற்சிக்கும் துணை நிற்பேன்.

நீங்கள் வெளிநாடு, வெளி மாநிலங்களுக்கு சென்று விளையாடுகின்ற போது, உங்களுக்காக உதவிட தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை என்றைக்குமே உங்களுக்கு துணை நிற்கும். அதன் மூலம், நிதி உதவி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கு என்றைக்கும் உதவிகளை நாங்கள் தொடர்ந்து செய்து வருகின்றோம். ஆகவே, நீங்கள் அத்தனை பேரும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதற்காக tnchampions.sdat.in என்கிற இணையதளத்தில் நீங்கள் என்றைக்கு வேண்டும் ஆனாலும் விண்ணப்பிக்கலாம். உங்களுக்கு உடனடியாக அந்த உதவிகள் செய்யப்படும். அதே மாதிரி இந்த ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை (Tamil Nadu CM Trophy) பதிவுகளை தொடங்கி இருக்கின்றோம். கிட்டத்தட்ட பரிசு தொகை மட்டும் 36 கோடி ரூபாய் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மூலமாக கொடுக்கப்படுகின்றது. அதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.

இறுதியாக ஒரே ஒரு விஷயம், பல நிகழ்ச்சிகளில் உங்களிடம் பலமுறை நான் சொல்லியிருக்கின்றேன். அதாவது மாணவர்களின் சார்பாக teachersகிட்ட ஒரே ஒரு கோரிக்கை தான். PT period-ஐ எந்த டீச்சரும் தயவு செய்து கடன் வாங்கி அதில் பாடம் நடத்தாதீர்கள். பள்ளிக் கல்வித்துறை அமைச்சரையும் வைத்துக் கொண்டு தான் இந்த கோரிக்கையை வைக்கின்றேன். வேண்டுமென்றால், அறிவியல், கணித ஆசிரியர்கள் (Science, Maths teachers) உங்களோட பாடநேரத்தில் (பீரியட்டில்), மாணவர்களுக்கு தயவு செய்து விளையாட்டு பாட நேரத்திற்கு (PT period-ஐ) கடன் கொடுங்கள்.

ஏனென்றால் விளையாட்டு பாட நேரத்திற்கு (PT period) என்பது ஒவ்வொரு மாணவருடைய உரிமை. அதில் நிச்சயமாக நீங்கள் விளையாட வேண்டும். விளையாட்டு பயிற்சிக்கு (Sports Practiceக்கு) நீங்கள் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். இங்கே இவ்வளவு மாணவர்கள் பதக்கங்கள் வாங்கி இருக்கிறதை பார்க்கும்போதே எனக்கு தெரிகிறது, இப்போதெல்லாம் விளையாட்டு பாட நேரத்தில் நீங்கள் விளையாட அனுமதிக்கிறீர்கள் என்பதை எங்களால உணர முடிகிறது, புரிந்து கொள்ள முடிகிறது. அதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும், வந்திருக்கக்கூடிய ஆசிரியர்களுக்கும் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பதக்கங்களை வென்ற மாணவ, மாணவியர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளையும் அவர்களுடைய பயிற்சியாளர்களுக்கு என்னுடைய பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்து, இந்த நல்ல வாய்ப்பை கொடுத்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும், அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் வந்திருக்கக்கூடிய மாணவச் செல்வங்கள் விளையாட்டு வீரர்கள் உங்கள் அத்தனை பேருக்கும் மீண்டும் என்னுடைய பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்து விடைபெறுகின்றேன்.