Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மேட்டுப்பாளையம் அருகே சாலையை கடக்க நீண்டநேரம் காத்திருந்த பாகுபலி யானை

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம்- குன்னூர் சாலையில் சாலையை கடக்க பாகுபலி யானை நீண்ட நேரம் காத்திருந்ததால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை வனச்சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே பாகுபலி என்ற ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் உள்ளது. இந்த யானை இதுவரை மனிதர்கள் யாரையும் தாக்கவோ, தாக்க முயற்சிக்கவோ இல்லை என்றாலும் தொடர்ந்து பயிர்களை சேதம் செய்து வருகிறது. இதனால், இந்த யானையை பிடித்து அடர் வனப்பகுதிக்குள் விட வேண்டும் என விவசாயிகளும், விவசாய சங்கங்களும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றிரவு நெல்லி மலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலையில் வாகன போக்குவரத்து இருந்ததால், சாலையை கடக்க நீண்ட நேரமாக சாலையின் ஓரமாகவே நின்று கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவயிடத்துக்கு வந்து வாகனங்களை இருபுறமும் நிறுத்தினர். இதையடுத்து சுமார் ஒரு மணி நேர காத்திருப்புக்கு பின்னர் சாலையை கடந்து மறுபுறம் உள்ள வனப்பகுதிக்குள் யானை சென்றது. சாலையின் ஓரத்தில் நின்றிருந்த பாகுபலி யானையை கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.