Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மகாராஷ்டிரா தேர்தலில் தேர்தல் ஆணையத்திடம் ஏதோ தவறு இருக்கிறது: அமெரிக்காவில் ராகுல் குற்றச்சாட்டு

பாஸ்டன்: மகாராஷ்டிரா தேர்தல் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் ஏதோ தவறு உள்ளது என அமெரிக்காவில் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் 2 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று முன்தினம் அமெரிக்கா சென்றடைந்த அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது: மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் வயதுவந்தோர் எண்ணிக்கையை விட அதிகமானோர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு தினத்தில் மாலை 5.30 மணிக்கு தேர்தல் ஆணையம் எங்களுக்கு தந்த வாக்குப்பதிவு எண்ணிக்கைக்கும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணிக்குள் தந்த எண்ணிக்கைக்கும் இடையே 65 லட்சம் வாக்குகள் வித்தியாசம் இருந்தது. நடைமுறைப்படி இது சாத்தியமில்லாதது. ஒரு வாக்காளர் வாக்களிக்க குறைந்தபட்சம் 3 நிமிடமாவது ஆகும். அதன்படி கணக்கு செய்து பார்த்தால் நள்ளிரவு 2 மணி வரை வாக்களித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

இதுதொடர்பாக வீடியோ பதிவை நாங்கள் கேட்ட போது, அவர்கள் மறுத்தது மட்டுமில்லாமல், அதற்கான சட்டத்தையும் மாற்றிவிட்டனர். அதனால் இப்போது எங்களால் வீடியோ பதிவை கேட்டு பெற முடியாது. அதற்கு அனுமதியில்லை. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் சமரசம் செய்து கொண்டது எங்களுக்கு மிகவும் தெளிவாக தெரிகிறது. தேர்தல் ஆணையத்திடம் ஏதோ தவறு உள்ளது. இதை நான் பலமுறை கூறி உள்ளேன். இவ்வாறு கூறினார். அமெரிக்காவில் 2 நாள் பயணத்தில் ரோட் தீவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடும் ராகுல் காந்தி பல்வேறு நிகழ்ச்சிகளும் பங்கேற்கிறார்.

* தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும்

மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத்துறை தலைவர் பவன் கேரா, ‘‘தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சி தனது சந்தேகத்தை வெளிப்படுத்தி உள்ளது. தேர்தல் ஆணையம் அவற்றுக்கு பதில் அளிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் பற்றி எங்களுக்கு சந்தேகங்கள் உள்ளது. வாக்குப்பதிவின் கடைசி நேரத்தில் வாக்குப்பதிவில் 10 முதல் 13 சதவீத புள்ளிகள் அதிகரிப்பது மனித ரீதியாக சாத்தியமில்லை” என்றார்.

* வெறுப்பு எண்ணங்களை பகிர்கிறார்: தர்மேந்திரபிரதான்

ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், ‘‘மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தனது கட்சியின் தொடர்ச்சியான தோல்விகளால் விரக்தி அடைந்துள்ளார். வெளிநாட்டு மண்ணில் இருந்து தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை மீண்டும் ஒரு முறை கேள்விக்குள்ளாகி உள்ளார். ராகுல் காந்தி வெளிநாட்டில் இருக்கும்போதெல்லாம் இந்தியா மற்றும் இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள் மீதான தனது வெறுப்பு எண்ணங்களை பகிர்ந்து கொள்வதற்கு தவறுவதில்லை என்பது மிகவும் துரதிஷ்டவசமானது” என்றார்.

* சோனியாவும், ராகுலும் சிறைக்கு செல்வார்கள்

பாஜவின் தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா, ‘‘அமலாக்கத்துறையின் மீதான கோபத்தை தேர்தல் ஆணையத்தின் மீது வெளிப்படுத்துகிறீர்கள். அவ்வாறு செய்வதன் மூலமாக எதுவும் நடக்காது. அமலாக்கத்துறை உங்களை விட்டுவிடாது. ஏனென்றால் ஏஜென்சிகள் உண்மையின் அடிப்படையில் செயல்படுகின்றன. நேஷனல் ஹெரால்டு விவகாரம் ஒரு திறந்த வழக்கு. நீங்களும், உங்கள் தாயும் குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்காக பிடிபட்டு சிறைக்கு அனுப்பப்படுவீர்கள். நீங்கள் ஒரு துரோகி. இந்திய நிறுவனங்களையும், இந்திய ஜனநாயகத்தையும் வெளிநாட்டு மண்ணில் அவமதித்ததால் மட்டுமல்ல. நேஷனல் ஹெரால்டு வழக்கில் நீங்களும் உங்கள் தாயாரும் கோடிக்கணக்கான ரூபாய் நாட்டின் பணத்தை மோசடி செய்துள்ளதாலும் கூட நீங்கள் துரோகி தான். நீங்களும் உங்களது தாயாரும் இதில் இருந்து தப்பிக்க முடியாது” என்றார்.