கேரளாவில் பங்குதாரருடன் தகாத உறவு என சந்தேகம் பெட்ரோல் ஊற்றி காருடன் மனைவியை எரித்து கொன்ற கணவன்: போலீசில் சரண்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லத்தில் தகாத உறவு சந்தேகத்தால் காரில் பெட்ரோல் ஊற்றி இளம்பெண் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் இளம்பெண்ணுடன் காரில் இருந்த வாலிபர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் பத்மராஜன் (60). இவரது மனைவி அனிலா (40). கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனிலா, கொல்லம் கடப்பாக்கடை பகுதியை சேர்ந்த ஹனீஸ் என்பவருடன் சேர்ந்து பேக்கரி கடை தொடங்கினார்.
இது பத்மராஜனுக்கு பிடிக்கவில்லை. ஒரு கட்டத்தில் அனிலாவுக்கும், ஹனீஸ்க்கும் தகாத உறவு இருப்பதாக பத்மராஜன் சந்தேகித்தார். இதனால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. பேக்கரி கடை நடத்த கணவர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தார். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. ஹனீஸிடமும் பத்மராஜன் தகராறு செய்தார். அப்போது, தான் முதலீடு செய்துள்ள பணத்தை கொடுத்தால் விலகி விடுவதாக ஹனீஸ் கூறியுள்ளார். உடனே வரும் 10ம் தேதிக்குள் பணத்தை தருவதாக பத்மராஜன் கூறியுள்ளார். ஆனாலும் பத்மராஜன் ஆத்திரத்தில் இருந்தார். மனைவியையும், ஹனீஸையும் தீர்த்துக்கட்ட தீர்மானித்தார்.
இந்நிலையில் வழக்கம் போல நேற்றிரவு கடையை பூட்டிவிட்டு அனிலாவும், வாலிபரும் காரில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். செம்மான்முக்கு என்ற பகுதியில் வந்தபோது, பெட்ரோல் கேனுடன் தனது காரில் பத்மராஜன் காத்திருந்தார். கார் வந்ததும் ஓடி சென்று வழிமறித்து, தயாராக வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி லைட்டரால் தீ வைத்தார். இதில் தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. அடுத்த விநாடியே, அருகில் நிறுத்தியிருந்த பத்மராஜனின் காரும் தீப்பிடித்து எரிந்தது. அவர், தப்பி ஓடினார்.
நடுரோட்டில் காரில் தீ பிடிப்பதை பார்த்ததும் அப்பகுதியினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். காரில் இருந்த அனிலா உடல் கருகி பரிதாபமாக இறந்தார். அவருடன் இருந்த பேக்கரி கடை ஊழியர் சோனி படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு கொல்லம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போதுதான் காரில் இருந்து ஹனீஸ் அல்ல என்பது பத்மராஜனுக்கு தெரியவந்தது. இதையடுத்து கொல்லம் கிழக்கு போலீஸ் நிலையத்தில் பத்மராஜன் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.


