Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகளை வைத்து 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகங்கள் வடிவமைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: தமிழ் மக்கள் நாகரிகத்தில் சிறந்தவர்களாக வாழ்ந்தார்கள் என்பதற்கான அறிவியல் சான்றுகள் கீழடியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகளை வைத்து 2,500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் உள்ள ஆய்வகத்தில் 3 டி முறையில் இந்த இரண்டு முகங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. 80 சதவீத அறிவியல் 20 சதவீத கலையை பயன்படுத்தி இவை வடிவமைக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கொந்தகை எனப்படும் கீழடி அருகிலுள்ள பகுதியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மண்டை ஓட்டிலிருந்து இம்முகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பேசிய முக உருவாக்க நிபுணரான பேராசிரியர் கேரோலைன் வில்கின்சன் கூறுகையில், ‘கீழடி அருகே கொந்தகையில் கிடைத்த எலும்புக்கூடு, நரம்புகள், தசை மாதிரிகள் ஆகியவற்றின் அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டு கணினி உதவியுடன் இந்த முகங்களை உருவாக்கியுள்ளோம்.

முகத்தின் மேற்பகுதி அங்கு கிடைத்த தொன்மங்களில் அடிப்படையிலும், கீழே தாடை போன்ற பகுதிகள் தொழில்நுட்ப உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளன. முக வடிவமைப்பில் தற்போதைய தென் இந்தியர்களின் படங்கள் மற்றும் மருத்துவ தரவுகள் ஆகியவற்றைக் கொண்டு தோல், கண்கள், முடி போன்றவற்றின் நிறமும் அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளன,’ என்றார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ‘சங்க இலக்கியம் சொற்களால் வடித்த வாழ்வியல் எல்லாம் அறிவியல்வழி நிறுவப்பட்ட சான்றாக கீழடியில்’ என்று பதிவிட்டுள்ளார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: கீழடியில் கிடைத்த மனித மண்டை ஓடுகளை ஆய்வு செய்து அறிவியல் வழியில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் முகத்தை வடிவமைத்துள்ளது இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம். கீழடியில் தமிழ் மக்கள் நாகரிகத்தில் சிறந்தவர்களாக வாழ்ந்தார்கள் என்பதற்கான அறிவியல் சான்றுகள் ஒன்றின் பின் ஒன்றாக உலக அரங்கில் நிரூபிக்கப்படுவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. இதற்கு பின்பாவது ஒன்றிய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா என்பதே 8 கோடி தமிழர்களின் மனங்களில் எழும் ஒரே கேள்வி என கூறியுள்ளார்.

* தமிழர்கள் நாகரிகத்தில் சிறந்தவர்கள் என்பதற்கான அறிவியல் சான்று.