கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் ஐயப்ப பக்தர்களுக்கு ஓய்வறை கட்டப்படுமா? சாலையோரம் அமர்ந்து சாப்பிடும் நிலை
கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது சபரிமலை சீசனையொட்டி ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வருகின்றனர். இவ்வாறு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு குமரியில் அடிப்படை வசதிகள் இல்லை என பக்தர்கள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இதுகுறித்து ஐயப்ப பக்தர்கள் கூறுகையில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சபரிமலை செல்வதற்காக மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறோம். மேலும் வாகனங்களில் சபரிமலைக்கு செல்லும் வழியில் முக்கிய சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வருகிறோம்.
இங்கு ஐயப்ப பக்தர்கள் தங்கவும், ஓய்வு எடுக்கவும், உணவு சாப்பிடவும் முறையான தங்கும் அறைகள் இல்லை. தனியார் விடுதிகள் மற்றும் தங்கும் அறைகளில் அதிகம் கட்டணம் வசூலிப்பதால் அங்கு செல்ல முடியவில்லை. தங்கும் அறைகள் இல்லாததால் கடலில் நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்த பின்னர் ஆங்காங்கே கடற்கரை சாலையோரம், சன்செட் பாயிண்ட் உள்ளிட்ட இடங்களில் அமர்ந்து உணவு சாப்பிட்டு ஓய்வு எடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மேலும் ஐயப்ப பக்தர்கள் வரும் அனைத்து வாகனங்களுக்கும் பேரூராட்சி சார்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே ஐயப்ப பக்தர்கள் நலன்கருதி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்கும் வகையில் ஓய்வறை கட்டிடம் கட்ட வேண்டும் என்றனர்.


