Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜார்கண்டில் காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வின் போது விபரீதம் : சுட்டெரிக்கும் வெயிலில் 10 கி.மீட்டர் தூரம் ஓடிய 11 இளைஞர்கள் உயிரிழப்பு!!

ராஞ்சி : ஜார்கண்ட் அரசால் நடத்தப்பட்ட காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வின் போது.11 இளைஞர்கள் சாலையில் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஜார்கண்ட் மாநில கலால்துறையில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களுக்கான தேர்வு தலைநகர் ராஞ்சி உள்ளிட்ட 7 நகரங்களில் கடந்த 21ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.எழுத்துத் தேர்வு முடிந்தவுடன் நடைபெற்ற உடல் தகுதி தேர்வில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தேர்வர்கள் 10 கிமீ ஓடி கடந்தால் மட்டுமே பணிக்கு தேர்வு செய்யப்படுவர் என்பதால் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது இளைஞர்கள் இலக்கை நோக்கி ஓடினர். ஆனால் இதில் 11 பேர் திடீரென மயக்கம் அடைந்து மரணம் அடைந்தனர்.

தேர்வுகளில் சிலர் ஊக்கமருந்தோ அல்லது உடனடி ஆற்றல் மற்றும் உடல் செயல்திறனை பெறுவதற்கான ஆற்றல் பானங்களையோ அருந்தி இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். இதனாலேயே ஓடும்போது மூச்சு திணறி அல்லது இதயம் செயலிழந்து மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்பது மருத்துவர்களின் ஐயமாக உள்ளது. ஆனால் நள்ளிரவு 12 மணி தொடங்கி இளைஞர்களை தூங்கவிடாமல் நீண்ட வரிசையில் நிற்க வைத்து மதியம் 12 மணிக்கு சுட்டெரிக்கும் வெயிலில் ஓடவிட்டது ஏன் என்று பாஜகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர். வேலைக்காக ஓடிய ஓட்டம் மரணத்திற்கான ஓட்டமாக மாறிவிட்டதாக குற்றம் சாட்டி பாஜகவினர் கண்டன பேரணி நடத்தினர். இளைஞர்கள் 11 பேர் மரணம் அடைந்த சம்பவம் குறித்த உண்மையான காரணங்களை கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக ராஞ்சி காவல்துறை தெரிவித்துள்ளது.