ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் சட்டபேரவையில் மக்கள் ஜனநாயக கட்சி, பாஜக உறுப்பினர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலையொட்டி முதல் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் கட்சியினர், அவர்கள் கூட்டணியினர் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட 370 சட்ட பிரிவை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று கடந்த சில தினங்களாக தீர்மானங்களை முன்னெடுக்க முயற்சி மேற்கொண்டனர்.
இதற்கு எதிர்க்கட்சியான பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்றைய தினம் இது தொடர்பான வாக்குவாதம் நடைபெற்ற நிலையில் 2வது நாளான இன்று அவாமி இதிஹாத் கட்சியின் எம்.எல்.ஏ வான குர்ஷித் அகமத் ஷேக் என்பவர் மீண்டும் 370வது சட்ட பிரிவை கொண்டுவர வேண்டும் என்று பதாகையை காட்டினார். சட்டப்பேரவையில் இது போன்ற பதாகைகளை காட்ட கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை பாஜகவினர் கிழித்தெறிந்தனர்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அவைக்காவலர்களும் உள்ளே புகுந்து எம்.எல்.ஏக்களை வெளியே இழுத்து செல்ல முற்பட்ட போது இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டது. சில எம்.எல்.ஏக்கள் ஆக்ரோஷமாக மேசையின் மீது ஏறி தாவிக்குதித்தனர். ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் இத்தகைய சம்பவம் நிகழ்வது 3வது முறையாகும். இச்சம்பவத்தின் போது 15 நிமிடங்கள் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை பரபரப்பான சுழல் காணப்பட்டது. தற்போது அவை காவலர்கள் பிரச்னைக்குரிய எம்.எல்.ஏக்களை வெளியேற்றியதற்கு பிறகு சுமுகமான விவாதங்கள் தற்போது நடைபெற்று வருகிறது.


