Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம்; இந்தியா ஆதரவு

நியூயார்க்: இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் ஓராண்டுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. காசா மீது சரமாரியாக குண்டு மழையை பொழிந்து வருகிறது இஸ்ரேல். இந்த தாக்குதலால் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர், வீடுகள், உடைமகளை இழந்து நிர்கதியாய் உள்ளனர். ஹமாஸ் அமைப்பினரை ஒழித்து கட்டும் வரை போர் ஓயாது என இஸ்ரேல் கூறியது.

இதனிடையே, பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு எதிராகவும் ஐ.நா. பொதுசபையில் பல்வேறு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதியிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தும் தீர்மானம் ஒன்று நேற்று முன்தினம் ஐ.நா. பொதுசபையில் கொண்டு வரப்பட்டது. அப்போது, ‘பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதியான தீர்வு’ என்ற பெயரிலான தீர்மானத்தை செனகல் நாடு முன்மொழிந்தது.

இது ெதாடர்பாக விவாதம் நடந்தது. இந்த விவாதத்துக்கு பின் தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா, தனது வாக்கை செலுத்தியது. இந்தியா தவிர மேலும் 156 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. இஸ்ரேல், அர்ஜென்டினா, ஹங்கேரி உள்பட 8 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தது. உக்ரைன், கேமரூன் உள்ளிட்ட 7 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன.