Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இஸ்ரேல் - ஈரான் விவகாரத்தில் மோடி அரசு மவுனம் காப்பது சரியல்ல: சோனியா காந்தி தாக்கு

புதுடெல்லி: இஸ்ரேல் - ஈரான் விவகாரத்தில் மோடி அரசு மவுனம் காப்பது சரியல்ல என்று சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய ராணுவத் தாக்குதலும், அதற்குப் பதிலடியாக ஈரான் நடத்திய தாக்குதல்களும் மேற்கு ஆசியாவில் அபாயகரமான பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில், டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்தின் துணைத் தலைவர் முகமது ஜவாத் ஹொசைனி, இஸ்ரேலின் இந்த ராணுவ நடவடிக்கையை இந்தியா உள்ளிட்ட நாடுகள் கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் சர்வதேச சட்ட மீறல் என்றும், இது பிராந்தியத்தில் பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்திருந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆங்கில நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில், ‘இஸ்ரேல் - ஈரான் விவகாரத்தில் இந்தியா காக்கும் மவுனம், ராஜதந்திரத் தவறாகும். இந்தியாவின் தார்மீக மற்றும் யுத்தி சார்ந்த பாரம்பரியங்களிலிருந்து விலகிச் செல்வதாகும். இஸ்ரேலின் தாக்குதலை சட்டவிரோதமானது மற்றும் இறையாண்மை மீறிய செயலாக உள்ளது. காசாவில் நிகழ்த்தப்படும் கொடூரமான தாக்குதல்களும் கண்டிக்கத்தக்கது.

இந்தியாவுக்கும் ஈரானுக்கும் ஆழமான நாகரிகத் தொடர்பு உள்ளது. கடந்த 1994ல் காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியாவுக்கு எதிராகத் தீர்மானம் வருவதைத் தடுக்க ஈரான் உதவியது. இஸ்ரேலுடன் இணைந்து இறையாண்மை கொண்ட பாலஸ்தீனம் அமைய வேண்டும் என்ற இந்தியாவின் நீண்டகால கொள்கையை மோடி அரசு கைவிட்டுவிட்டது. எனவே இனியும் தாமதிக்காமல், இந்தியா தெளிவாகப் பேச வேண்டும்; பொறுப்புடன் செயல்பட வேண்டும். போர் பதற்றத்தைத் தணிக்க அனைத்து ராஜதந்திர வழிகளையும் பயன்படுத்த வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.