Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஈரான் தலைவர் கமேனி பதுங்கியிருக்குமிடம் தெரிந்துவிட்டது.. சரணடைந்தால் உயிர் பிழைக்கலாம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!!

வாஷிங்டன்: இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஈரானின் வான்வெளி அமெரிக்கா கட்டுக்குள் உள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையிலான மோதல் 5 நாட்களை கடந்து தொடர்ந்து வரும் நிலையில், இரு நாடுகளும் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாடின் தலைமையகத்தை ஏவுகணை தாக்குதல் மூலம் தகர்த்தி விட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரானின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனத்தின் ஒரு பகுதி முழுமையாக சேதமடைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல் ஈரானின் ராணுவ கட்டமைப்பு மற்றும் ஆயுத கிடங்குகளை குறிவைத்து புதிய ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஈரானின் அணு ஆயுத கட்டமைப்பை அழிப்பதே முதல் நோக்கம் என இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியான் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இதுவரை தாக்குதலை தடுக்க மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில், இனி தண்டனை நடவடிக்கையாக தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் என ஈரான் ராணுவம் இஸ்ரேலை எச்சரித்துள்ளது. இஸ்ரேல் மாற்றும் ஈரான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானின் உயர்மட்ட தலைவர் அயத்துல்லா அலி கமேனி பதுங்கி இருக்கும் இடம் தெரிந்து விட்டதாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவிட்டு அதிர்வலையை கிளப்பியுள்ளார். கமேனியை கொலை செய்யும் திட்டம் தற்போது இல்லை என தெரிவித்த டிரம்ப், ஈரானின் ஒட்டுமொத்த வான்வெளியும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பொறுமைக்கும் எல்லை உண்டு என பதிவிட்டுருக்கும் அவர், ஈரான் தலைவர் கமேனி நிபந்தனையின்றி சரணடைவதே ஒரே தீர்வு என தெரிவித்தார். இதற்கு முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், ஈரான் - இஸ்ரேல் விவகாரத்தில் போர் நிறுத்தம் முடிவாக அமையாது என தெரிவித்தார். இஸ்ரேல் - ஈரான் உயர்மட்ட தலைவர் அயத்துல்லா அலி கமேனியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்பட்ட நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் கமேனி இருக்கும் இடம் தொடர்பாக பேசி இருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில், பதுங்கும் குழிகளை தாக்கி அழிக்கும் சக்திவாய்ந்த ஏவுகணைகளை இஸ்ரேல் அமெரிக்காவிடம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.