Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஐதராபாத் எம்பியான ஒவைசியின் வீட்டின் மீது கறுப்பு மை வீச்சு: அமித் ஷா, ஓம் பிர்லா மீது அதிருப்தி

புதுடெல்லி: ஐதராபாத் எம்பியான ஒவைசியின் ெடல்லி வீட்டின் மீது மர்ம நபர்கள் கறுப்பு மை வீசப்பட்ட சம்பவம் குறித்து ெடல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் எம்பியும், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவருமான அசாதுதீன் ஒவைசி, சமீபத்தில் சமூக வலைதளங்கள் மூலமாகவும், மக்களவையிலும் எமர்ஜென்சி காலத்தில் ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்டது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குறித்தும் சில கருத்துகளை தெரிவித்திருந்தார். அதேபோல் எம்பியாக பதவியேற்கும் போது, ‘ஜெய் பாலஸ்தீனம்’ என்றும் குறிப்பிட்டு பதவியேற்றார். இவரது கருத்துகள் தேசிய அளவில் விவாதத்துக்கு ஆளாகியது. இந்நிலையில் டெல்லியில் உள்ள அவரது வீட்டில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கறுப்பு மையை வீசிவிட்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் எனது டெல்லி வீட்டை கறுப்பு மையால் நாசப்படுத்தி உள்ளனர். டெல்லி காவல்துறையிடம் தொடர்பு கொண்ட போது, இதுகுறித்து அவர்கள் எதுவும் கூறவில்லை. எம்பிக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படுமா? இல்லையா? என்பதை உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், சபாநாயகர் ஓம் பிர்லாவும் உறுதிபடுத்த வேண்டும். தாக்குதல் நடத்தியவர்கள் என்னை பயமுறுத்தவில்லை. அவர்கள் சாவர்க்கர் மாதிரியான கோழைத்தனமாக செயல்பட்டுள்ளனர். கறுப்பு மை அல்லது கற்களை எறிந்துவிட்டு ஓடாதீர்கள்’ என்று கூறியுள்ளார். ஒவைசி வீட்டின் மீது மர்ம நபர்கள் கறுப்பு மை வீசிவிட்டு சென்ற சம்பவம் குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.