Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நெடுஞ்சாலைத்துறை பணிகள் தொடர்பாக ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார் அமைச்சர் எ.வ.வேலு..!!

சென்னை: நெடுஞ்சாலைத்துறையின் தலைமைப் பொறியாளர்களின் பணிகள் தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு , ஆய்வு செய்து சில அறிவுரைகள் வழங்கினார்கள். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று (27.06.2025) பொதுப்பணிகள், நெஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் .எ.வ.வேலு , நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர்களின் பணிகள் குறித்து ஆய்வு செய்து சில அறிவுரைகள் வழங்கினார்கள்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், நெடுஞ்சாலைத்துறையைச் சார்ந்த அனைத்து தலைமைப் பொறியாளர்களும் கலந்து கொண்டனர். தலைமைப் பொறியாளர்கள் மற்றும் கோட்டப் பொறியாளர்களுடன் தலைமையிடத்தில் மாதம் ஒருமுறை பணி முன்னேற்றம், விரிவானத் திட்ட அறிக்கை தயாரிக்கும் கோப்புகள், நிலஎடுப்பு, நீதிமன்ற வழக்குகள் போன்ற முக்கியப் பணிகளை ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தினார்கள். தலைமைப் பொறியாளர்கள் ஆய்வு கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, கண்காணிப்புப் பொறியாளர்கள், கோட்டப் பொறியாளர்கள்,

உதவிக் கோட்டப் பொறியாளர்கள் மற்றும் உதவிப் பொறியாளர்களுடன், கண்காணிப்புப் பொறியாளர்கள் ஆய்வு நடத்த வேண்டும். அதேபோன்று, கோட்டப் பொறியாளர்களும் சம்மந்தப்பட்ட களப்பொறியாளர்களுடன் தணிக்கை நாள் ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும். இதனை கண்காணிப்புப் பொறியாளர்கள் ஆய்வு நடைபெறகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். மேலும், தலைமைப் பொறியாளர் ஒரு மாதத்தில், குறைந்தப் பட்சம் 10 நாட்களுக்கு களஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.

வேலை தளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதாவது, சாலைகள் குறுக்கே பாலங்கள் கட்டும்போது, போதிய தடுப்புகள் (Barricades) வலிமையாக அமைக்கப்பட வேண்டும். இரவில், ஒளிரும் ஸ்ட்டிக்கர்(Sticker) மற்றும் ஒளிரும் பிரிதிபலிப்புப் பாதைகைகள் வைக்கப்பட வேண்டும். கவனக் குறைவு மற்றும் கடமையில் அலட்சியமாக செயல்பட்டால், சம்மந்தப்பட்ட பொறியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்கள். சாலையின் தரத்தினை பல்வேறு கட்டங்களில், தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும், முத்திரைத் திட்டங்கள் (Iconic Scheme) குறித்து, 15 நாட்களுக்கு ஒருமுறை அரசுக்கும், செயலாளர் அவர்களுக்கும் பணியின் முன்னேற்ற அறிக்கையினை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை வரை உயர்மட்டப் பாலம், மதுரை அப்போலா பாலம், மதுரை இராஜாஜி சந்திப்பு அருகே பாலம் போன்ற முக்கியமான பணிகளை தனிக்கவனம் செலுத்தி விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்கள். புறவழிச் சாலைகள் அமைக்க அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டும், சில புறவழிச்சாலைப் பணிகள் நிறைவுபெறாமல் உள்ளது. இதில், தலைமைப் பொறியாளர்கள் உரிய கவனம் செலுத்தவேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

சாலை உபகரணங்கள், IRC விதி முறைகளுக்குட்பட்டு, தேவையான இடங்களில் மட்டும் அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்திய அமைச்சர் , சாலை இருபுறமும் படர்ந்துள்ள முட்புதர்களை அகற்ற வேண்டுமென்றும், பள்ளமில்லா சாலைகளாகப் பராமரிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டார்கள். சாலையில் மையத் தடுப்பான்(Center Median) அருகே மண் குவியல்கள் உடனுக்குடன் அகற்றப்பட்டு, நடைமேடையில் ஏதேனும் குறையிருந்தால் அவ்வப்போது பார்வையிட்டு, சீரமைக்கப்பட வேண்டும். இப்பணிகள் அனைத்தும் 30.7.2025க்குள் முடிக்கப்பட வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்கள்.இந்த ஆய்வுக் கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசுச் செயலாளர் இரா.செல்வராஜ் இ.ஆ.ப., பங்குப் பெற்றார்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.