Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

எனது மகன் என்னை கொல்ல பார்க்கிறாரா? வதந்திகளை பரப்பினால் மான நஷ்ட வழக்கு தொடர்வேன்: ஜெகன்மோகனின் தாய் எச்சரிக்கை

திருமலை: எனது மகன் குறித்து வதந்திகளை பரப்பினால் மான நஷ்டஈடு வழக்கு தொடர்வேன் என ஆந்திர முன்னாள் முதல்வர் ெஜகன்மோகனின் தாய் விஜயம்மா எச்சரித்துள்ளார். ஆந்திராவில் ஆளும் தெலுங்குதேசம் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தாயார் விஜயம்மா குறித்த ஒரு வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில், கடந்த 2022ம் ஆண்டு கர்னூலில் இருந்து ஐதராபாத் நோக்கி புதிய சொகுசு காரில் விஜயம்மா பயணம் செய்தார்.

அப்போது திடீரென காரின் 2 டயர்களும் வெடித்தது. இதில் டிரைவரின் சாதுர்யம் காரணமாக விஜயம்மாவுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. இந்த புகைப்படங்களை பதிவு செய்ததோடு, முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தனது அரசியல் ஆதாயத்திற்காக கடந்த 2019ல் தனது சொந்த சித்தப்பா விவேகானந்தாரெட்டியை கொலை செய்தார். 2024 தேர்தலை மையப்படுத்தி தனது தாயை கார் விபத்தில் சிக்க வைக்க முயன்றார்’ என பதிவு செய்யப்பட்டிருந்ததாம்.

இதற்கு அமெரிக்காவில் தற்போது தங்கியுள்ள விஜயம்மா, ஆட்சேபம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால் இந்த அறிக்கையை விஜயம்மா வெளியிடவில்லை, ஜெகன்மோகன்தான் வெளியிட்டிருப்பார் என தெலுங்கு தேசம் கட்சியினர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அமெரிக்காவில் இருந்தபடி விஜயம்மா நேற்று வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது: உங்கள் அரசியல் ஆதாயத்திற்காக எதை வேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம் என இருக்காதீர்கள். எங்கள் வீட்டு சொத்து பிரச்னை, அண்ணன், தங்கை பிரச்னை இவையெல்லாம் எங்கள் குடும்ப பிரச்னை. இதில் நீங்கள் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம். எப்போதோ நடந்த கார் விபத்தை இப்போது வைரலாக்கி வருகிறீர்கள்.

எனது மகன் ஜெகன்மோகனை தேவையின்றி குற்றம் சாட்டுகிறீர்கள். எனது மகன், என்னை ஏன் கொலை செய்ய வேண்டும்? எனது பேரனுடன் சில நாட்கள் தங்குவதற்காகத்தான் அமெரிக்கா வந்துள்ளேன். ஆனால் ஜெகன்மோகனுக்கு பயந்து அமெரிக்காவில் தங்கியிருப்பதாக கூறி வருகிறீர்கள். எனது மகன் மற்றும் மகளை சரியாகத்தான் வளர்த்துள்ளேன். அவர்கள் அரசியல் வாழ்க்கையிலும் சரி, குடும்பத்திலும் சரி நேர்மையாகத்தான் வாழ்கின்றனர். எனவே தேவையற்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். மீறினால் மானநஷ்ட வழக்கு தொடரப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.