Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேர்தல் நேரத்தில் ஒன்றிய அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது: தேர்தல் ஆணையத்துக்கு முன்னாள் அதிகாரிகள் கடிதம்

டெல்லி: தேர்தல் நேரத்தில் ஒன்றிய அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் அதிகாரிகள் 87 பேர் தலைமை தேர்தல் ஆணையருக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் ஒன்றிய அரசை கண்டு தேர்தல் ஆணையம் மவுனமாக இருக்கக்கூடாது. அரசியல் சட்ட 324-வது பிரிவின்படி அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை அமைப்புகளை ஆணையம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய அரசை போல மாநில அரசும் தங்கள் விசாரணை அமைப்புகளை பயன்படுத்தினால் அராஜகத்தில் முடியும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தேர்தல் நேரத்தில் பெரும் குழப்பங்களை விளைவிக்கும் என்றும் 87 அதிகாரிகளும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். ஊழலை ஒழிப்பதில் மாற்றுக்கருத்து இல்லை; ஆனால், தேர்தல் நேரத்தில் பழிவாங்குவது தவறு என்றும் தெரிவித்துள்ளனர். தேர்தல் ஆணையம் தங்கள் கடமையை மறந்து உடனடி நடவடிக்கை எடுக்காதது ஆழ்ந்த வேதனை அளிப்பதாக கருத்து தெரிவித்துள்ள அதிகாரிகள், மின்னணு வாக்கு இயந்திரங்கள் பற்றி எழுப்பிய சந்தேகங்களை போக்க ஆணையம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்திருக்கின்றனர். ஆளுங்கட்சியினர் நடத்தை விதிகளை மீறுவதில் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.