Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காளையார்கோவில் அருகே 17ம் நூற்றாண்டு நில தானக் கல்வெட்டு கண்டெடுப்பு

காரைக்குடி: காளையார்கோவில் அருகே, 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த நில தான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் முனைவர் பாலசுப்பிரமணியன், ஜெமினி ரமேஷ் ஆகியோர் காளையார்கோவில் அருகே உள்ள குறுமனேந்தல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அப்பகுதியில் நில தான கல்வெட்டை கண்டுபிடித்தனர். இது குறித்து முனைவர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், ‘‘இந்த கல்வெட்டு 17ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த ஊருக்கு அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு நிலம் தானம் வழங்கப்பட்டுள்ளது குறித்து இந்த கல்வெட்டில் விளக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் 13 வரிகள் உள்ளன. அதில் ஆனந்த வருடம் பங்குனி பகல் திருமலை சேதுபதிக்கு புண்ணியமாக சந்திரன் என பொறிக்கப்பட்டுள்ளது.

இதில், பல எழுத்துக்கள் சிதிலமடைந்துள்ளன. ராமநாதபுரத்தை ஆட்சி செய்த திருமலை சேதுபதி மன்னரால் சிவன் கோயிலுக்கு நிலம் தானம் வழங்கியதாக தெரிகிறது. சூலம் சிவனுக்கு உரியது என்பதால் கல்வெட்டில் அது இடம் பெற்றுள்ளது. சேதுபதி மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் கோயில் திருப்பணிகளுக்கும், பராமரிப்புக்கும் நிலம் தானமாக வழங்கியுள்ளனர். இந்த தான கல்வெட்டு மூலம், சேதுபதி மன்னர் ஆட்சி காலத்தில ராமநாதபுரம், சிவகங்கை ஒருங்கிணைந்த பகுதியாக இருந்துள்ளது. கோயில் வளர்ச்சிக்கு சேதுபதி மன்னர்கள் செய்த கொடைகள் இந்த கல்வெட்டு மூலம் தெரியவருகிறது’’ என்றார்.