ரவுடிகளுக்கு எதிராக பேசிய விவகாரம் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் ஆணையத்தில் நேரில் ஆஜராக விலக்கு: மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி மணிக்குமார் உத்தரவு
சென்னை: ரவுடிகளுக்கு எதிராக பேசியதாக மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கில் இருந்து சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் நேரில் ஆஜராக விலக்கு அளித்து ஆணையத்தின் தலைவரான நீதிபதி மணிக்குமார் உத்தரவிட்டுள்ளார். சென்னை பெருநகர போலீஸ் கமிஷனராக அருண் கடந்த ஜூலை 8ம் ேததி பொறுப்பேற்றார். அப்போது அவர், அளித்த பேட்டியில் சென்னையில் முழுவதுமாக ரவுடிகள் ஒழிக்கப்படும் என்றும், அவர்களுக்கு புரியும் மொழியில் சொல்லிக்கொடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து பெருநகர காவல் எல்லையில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் முதல் உதவி கமிஷனர்கள் வரை, அவரவர் காவல் எல்லையில் உள்ள ரவுடிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களின் உறவினர்களை சந்தித்து எச்சரிக்கை விடுத்தனர்.
திருவொற்றியூரில் உள்ள ரவுடி ஒருவரின் வீட்டிற்கு சென்ற திருவொற்றியூர் உதவி கமிஷனர் இளங்கோவன், ரவுடியின் மனைவியிடம் கடுமையாக எச்சரித்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன் வந்து உதவி கமிஷனர் இளங்கோவன் மற்றும் அவருடன் சென்ற போலீசார் மீது வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் அக்டோபர் 14ம் தேதி நேரில் ஆஜராகுமாறு ஆணையம் சம்மன் அனுப்பியது. இதையடுத்து மனித உரிமைகள் ஆணைய தலைவர் நீதிபதி மணிக்குமார் முன்பு சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அருண் சார்பில் கூடுதல் அட்வகெட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜரானார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது கமிஷனர் அருண் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் நேரில் ஆஜராகி கமிஷனர் ஒரு மனுவை ஆணையத்தில் தாக்கல் செய்தார். பின்னர் மூத்த வழக்கறிஞர் வில்சன் அஜராகி வாதிடும் போது, ’சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றது முதல் சென்னையில் ரவுடியிசம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாநகர காவல் ஆணையரின் பத்திரிகையாளர் சந்திப்பானது குற்றங்களின் விளைவுகள் மற்றும் சமூகத்தில் அவற்றின் தாக்கம் குறித்தே பேசியதாகவும், சில ரவுடிகள் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி பேசுபவர்களாய் இருப்பதால் அவர்கள் மொழியில் பேசுவது என்பது தவறில்லை என்பதால், இது மனித உரிமை மீறல் ஆகாது எனவும் வில்சன் தெரிவித்தார். மேலும், ரவுடிகளுக்கு அவர்களின் மொழியில் புரிந்து கொள்ளச் செய்வதே இதன் நோக்கம் மற்றும் அதற்குமேல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதனை அனுமானிக்கவோ அல்லது வேறு அர்த்தம் கற்பிக்கவோ கூடாது எனவும் அவர் வாதிட்டார்.
ஒரு காவல் ஆணையர் என்பவர் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும். இது குறித்து நிருபர்கள் கேட்டபோது, சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படுவதை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து முறையான காவல் கண்காணிப்புப் பணி செய்யப்படும் என்று காவல் ஆணையர் தெளிவுபடுத்தினார். அதுமட்டுமின்றி, காவல்துறை ஆணையர் இந்த நாட்டின் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை அமைப்பில் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், காவல்துறை அதிகாரிகளின் பங்கு மற்றும் பொறுப்புகள் மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கடமை ஆகியவற்றை அறிந்திருப்பதாகவும், எனவே காவல் ஆணையரின் பேச்சுக்கு வேறு அர்த்தம் இருக்க முடியாது என்றும் வில்சன் எடுத்துரைத்தார்.
மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் வாதங்களை ஏற்று, மநில மனித உரிமைகள் ஆணையமானது, இந்த வழக்கில் இருந்து காவல் ஆணையர் அருண் பெயரை நீக்கியது. வில்சன் வேண்டுகோளுக்கிணங்க ஏற்கனவே ஒப்புக்கொண்ட பணிகள் காரணமாக மாநில மனித உரிமை ஆணையத்தில் ஆஜராவதில் இருந்து மாநகர காவல் ஆணையருக்கு விலக்கு அளிக்கப்பட்டது.


