Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காஞ்சிபுரத்தில் வரும் 20ம்தேதி வரதராஜ பெருமாள் கோயில் பிரமோற்சவ விழா துவக்கம்: 26ம் தேதி தேர்த்திருவிழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் வைகாசி பிரமோற்சவ விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்தாண்டு வரும் 20ம்தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு பெருமாளுக்கும், பெருந்தேவி தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெறும். காலை, மாலை நேரங்களில் பெருமாள், தேவி, பூதேவி சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு ராஜவீதி மற்றும் முக்கிய வீதிகளில் உலா நடைபெறும். திங்கட்கிழமை மாலை சிம்மவாகனத்திலும், மறுநாள் அம்சவாகனம், சூரியபிரபை நடைபெறும். 22ம்தேதி உலகப் புகழ்பெற்ற கருடசேவை உற்சவம் நடைபெறும். பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைதத்தொடர்ந்து மறுநாள் அனுமந்த வாகனம், சேஷவாகனம், சந்திரபிரபை, தங்க பல்லக்கு, யாளி வாகனம், தங்க சப்பரம், யானை வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்கள் அருள்பாலிக்கிறார். 26ம்தேதி முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நடைபெறுகிறது. அன்று அதிகாலை வரதராஜ பெருமாள் அலங்கரிக்கப்பட்ட தேரில் ராஜவீதி மற்றும் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் தேரை வடம்பிடித்து இழுத்து செல்வார்கள். மறுநாள் தொட்டி திருமஞ்சனம், குதிரை வாகனம், ஆள் மேல் பல்லக்கு, தீர்த்தவாரி, புண்ணியகோட்டி விமானம், த்வாதச ஆராதனம், வெட்டிவேர் சப்பரம் உள்ளிட்ட பல்வேறு கோலங்களில் வீதிஉலா வருகிறார். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சீனிவாசன், பட்டாச்சாரியார்கள், விழா குழுவினர் மற்றும் காஞ்சிபுரம் பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.