Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சின்னமனூர் அருகே பலத்த மழையால் பல ஏக்கர் வாழை சேதம்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

சின்னமனூர்: சின்னமனூர் அருகே, சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் பல ஏக்கர் பரப்பில் வாழை மரங்கள் ஒடிந்து சேதமடைந்தன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், சின்னமனூர் பகுதியில் பெரியாறு பாசனம் மூலம் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இது தவிர சுமார் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வாழை விவசாயமும் நடந்து வருகிறது.

இந்நிலையில், சின்னமனூர் பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன்னர், பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. சுமார் 45 நிமிடங்கள் வரை காற்று, மழை நீடித்தது.

இதனால் சின்னமனூர், கன்னியம்பட்டி, முத்துலாபுரம், ஊத்துப்பட்டி, வாய்க்கால்பட்டி, எரசக்கநாயக்கனூர், அப்பிபட்டி, கன்னிசேர்வைபட்டி, ஓடைப்பட்டி, அய்யனார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் பல ஏக்கர் பரப்பில் வாழை மரங்கள் ஒடிந்து சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் சுமார் 20 ஏக்கரில் பச்சை மற்றும் செவ்வாழைகள் சேதமடைந்துள்ளன. இதில் ஐந்து மாதம் முதல் அறுவடைக்கு தயாரான வாழைகள் வரை சுமார் ஒரு லட்சம் மரங்கள் சேதம் அடைந்துள்ளன. இது குறித்து வேளாண்மை துறை மூலம் கணக்கீடு செய்து விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.