Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிதம்பரம் நகராட்சியில் வரும் 15ம் தேதி ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்வர் தொடங்குகிறார்: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு நாளை முதல் வீடுவீடாக விண்ணப்பம்: 1 லட்சம் தன்னார்வலர்கள் வழங்குகின்றனர்

சென்னை: தமிழகத்தில் 1 லட்சம் தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று விடுபட்டவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பத்தை நாளை முதல் விநியோகம் செய்கிறார்கள். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் முகாம்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 15ம் தேதி கடலூரில் தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த ஆண்டு சட்டமன்ற பேரவையில், மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் துவங்கப்படும் என அறிவித்திருந்தார். அவரது அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டம் துவக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நடத்தப்படும் முதல் முகாமை வருகிற 15ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டம் ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும். தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசு துறைகளின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கம்.

இந்த திட்டத்தின் கீழ் நகர்ப்புற பகுதிகளில் 3,768 முகாம்களும், ஊரக பகுதிகளில் 6,232 முகாம்களும் நடைபெறும். முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசு துறைகளை சார்ந்த 43 சேவைகளும், ஊரக பகுதிகளில் 15 துறைகளை சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்படும்.

இந்த திட்டத்தின் கீழ், தன்னார்வலர்கள், ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக சென்று, முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள், அங்கு வழங்கப்படவுள்ள பல்வேறு அரசு துறைகளின் திட்டங்கள், சேவைகளை விவரித்து, அவற்றில் பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவிப்பதோடு தகவல் கையேட்டினையும், விண்ணப்பத்தையும் வழங்குவார்கள்.

இத்திட்டம் குறித்த விவரங்களை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி நாளை (7ம் தேதி) முதல் தொடங்க உள்ளது. இந்த பணி மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். இப்பணிக்காக சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் உங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.