Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அரசுப் பள்ளிகளுக்கு விநியோகம் செய்ய 3 கோடி புத்தகங்கள் தயார்: தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகம் தகவல்

சென்னை: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும்போது மாணவ மாணவிகளுக்கு வழங்குவதற்காக 3 கோடி விலையில்லா பாடப்புத்தகங்கள் அச்சிட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை அடுத்த வாரம் பள்ளிகளுக்கு அனுப்பிவைக்க தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வித் துறையின் கீழ் இயங்கும் தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்கு தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிந்து ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பாடப்புத்தகங்களை இந்த ஆண்டு ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும்போது வழங்கும் வகையில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அச்சிட்டுள்ளன.

இதன்படி ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கான முதல் பருவ பாடப்புத்தகங்கள், சுமார் 3 கோடி புத்தகங்கள் அச்சிட்டு தயார் நிலையில் உள்ளன. அந்தப் புத்தகங்கள் தற்போது அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்கும் பணி நடக்கிறது. அவர்கள் அந்தப் புத்தகங்களை பெற்று, அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இந்த மாத இறுதிக்குள் அனுப்பி வைப்பர்.

இதைத்தொடர்ந்து பள்ளிகள் மூலம் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும். அதேபோல நோட்டுகளும் இதர விலையில்லாப் பொருட்கள் வழங்கவும் பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. பள்ளிகள் தவிர சில்லறை விற்பனைக்காக 1 கோடியே 35 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இவை தற்போது சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.