Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கொத்தடிமையாக இருந்தார்களா? செங்கல்சூளையில் பணியாற்றிய ஒடிசா தொழிலாளர்கள் மீட்பு

திருவள்ளுர்: திருவள்ளூர் மாவட்டம் சிவன்வாயல் கிராமத்தில் உள்ள ஒரு செங்கல்சூளையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 6 தொழிலாளர்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி பணியாற்றிவருவதாக தொடர்ந்து புகார்கள் சென்றன. இந்த நிலையில், வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட சட்டபணிகள் குழு செயலாளர் நளினிதேவி, மண்டல துணை வட்டாட்சியர் தினேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் பொன்மலர் ஆகியோர் சென்று ஆய்வு செய்தனர். இதில், ஓடிசா மாநிலம் பலங்கிர் மாவட்டத்தை சார்ந்த சிபமாலிக் (30), விபஞ்சலி மாலிக் (25), பகாரட் நாக் (58), சாய்ரேந்திரி நாக் (45), ஹடுபரிகா (60), ஜென்ஹி பரிஹா (47) மற்றும் குழந்தை ஹாஹில் மாலிக் (3) ஆகியோர் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. முன்பணமாக ரூ.35 ஆயிரம் கொடுத்து செங்கல்சூளையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தொழிலாளர் குடும்பங்களுக்கு வாரத்திற்கு 1000 செங்கற்களுக்கு ரூ.500 வீதம் குறைந்தபட்ச ஊதியம்தான் வழங்கி உள்ளனர். தொழிலாளர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லாமல் செங்கல்சூளையிலேயே வைத்து சிகிச்சை அளித்துள்ளனர்.

இதையடுத்து தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை அதிகாரிகள் செய்து கொடுத்தனர். இதுசம்பந்தமாக செங்கல்சூளை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. இந்நிலையில் செங்கல் சூளையின் கணக்குகளை ஆய்வு செய்தபோது தொழிற்சாலைகள் சட்டம் - 1948 ன்கீழ் முறையாக பதிவு செய்து உரிம் பெறவில்லை என்பதும், முறையான வருகை பதிவேடு, ஊதியப் பதிவேடு ஏதும் பராமரிக்கப்படவில்லை என்பதும், கூடுதல் நேரம் பணிபுரிந்ததற்கான ஊதியமும் வழங்கப்படவில்லை என மீட்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர். தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வதாக தெரிவித்தபோது, தங்களுக்கு வழங்கப்பட்ட முன்பணம் ரூ.35 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரத்தை திருப்பி செலுத்திவிட்டு செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாரட் நாக் என்பவர் தன்னுடைய மகன் அமிட் நாக் என்பவருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ரூ.20 ஆயிரத்தை போன் பே மூலம் லோகநாதன் என்பவருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த தொகையினை நிர்வாகத்திடம் அளித்துவிட்டு தங்களது சொந்த ஊருக்கு செல்ல தயாராகி இருந்தனர். அப்போது அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு ரூ.20 ஆயிரத்தை திரும்ப பெற்று தொழிலாளர்களிடம் திரும்ப வழங்கினர். மேலும் 6 தொழிலாளர்களையும் மீட்டு காக்களூர் தனியார் மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கி அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும் வெங்கல் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் மைக்கேல் ராஜ் புகார் அளித்தார்.