Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சுடுகாட்டிற்கு சென்றாலும் செல்வனே தவிர வேறு கட்சிக்கு செல்ல மாட்டேன்.! அதிமுக எம்எல்ஏ சுகுமார் திட்டவட்டம்

சென்னை: சுடுகாட்டிற்கு சென்றாலும் செல்வனே தவிர ஒருபோதும் மாற்று கட்சிக்கு செல்ல மாட்டேன் என்று ஆற்காடு தொகுதி அதிமுக எம்எல்ஏ சுகுமார் திட்டவட்டமாக கூறி உள்ளார். இன்று சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல் அதிமுக எம்எல்ஏ சுகுமார் புறக்கணித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

காலை ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகளுடனும், பின்னர் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளுடனும் தனித்தனியாக ஆலோசனை நடத்தப்பட்டது. ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளராக இருந்து வந்த ஆற்காடு தொகுதி எம்.எல்.ஏ. சுகுமார், சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையை எதிர்த்து செயல்பட்டதாலும், தவெக அரசிற்கு ஆதரவாக வாக்களித்ததாலும் அதிமுக மாவட்ட செயலாளர் பொறுப்பு அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக சுமைதாங்கி ஏழுமலை புதிய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இதனிடையே மாவட்ட செயலாளர் பதவிக்கு மாற்றாக எஸ்.எம். சுகுமாருக்கு கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. ஆனால் அவர் இந்த பதவியை ஏற்க மறுத்துவிட்டார். இந்த நிலையில் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காததால், விரைவில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெக-வில் இணைய கூடும் என்ற பேச்சு பலமாக எழுந்தது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ சுகுமார், நான் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காதது, பதவியை ஏற்க மறுப்பது எல்லாம் உட்கட்சி விவகாரம், அது குறித்து விரிவாக பேச இயலாது என்றார்.

மாற்று கட்சிக்கு செல்லும் யோசனை ஏதாவது இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த சுகுமார், 100 சதவீதம் கிடையாது, சுடுகாட்டிற்கு போனாலும் போவனே தவிர மாற்று கட்சி எதற்கும் நான் போக மாட்டேன் என்று தீர்க்கமாக கூறி, தன்னை பற்றிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் அதிமுக கட்சி மூலமாகவே நான் மக்களுக்கு அடையாளம் காட்டப்பட்டு உள்ளேன், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் ஆற்காடு பொறுப்பாளர்களின் உழைப்பினால் நான் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகி உள்ளேன். இப்படி இருக்கையில் மாற்று கட்சிக்கு செல்ல மாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.