Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஏசி டிக்கெட் வாங்கியவர் சாதாரண பஸ்சில் பயணம்: ரூ.60 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவு

நெல்லை: ஏசி டிக்கெட்டில் சாதாரண பஸ்சில் பயணித்த முதியவருக்கு அரசு போக்குவரத்து கழகம் ரூ.60 ஆயிரம் வழங்க வேண்டும் என நெல்லை நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லை, பாளையங்கோட்டை, புதிய பேருந்து நிலைய சாலை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவேல் (64). இவர் கடந்த ஆண்டு ஆக.27ல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் அரசு பஸ்சில் நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு ஏசி பஸ்சில் ரூ.61க்கு டிக்கெட் வாங்கி பயணம் செய்தார். வாகைகுளம் அருகே அந்த பஸ் பழுதாகி நின்றதால் சண்முகவேலை அந்த பஸ்சின் நடத்துநரும், ஓட்டுநரும் சாதாரண பஸ்சில் வற்புறுத்தி ஏற்றி அனுப்பினர். அந்த பஸ்சில் அமர இடம் கிடைக்காததால் சண்முகவேல் படியில் பயணித்து கடும் அவதிக்கு உள்ளானார்.

இதில் அவரது சட்டை கிழிந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சண்முகவேல் நெல்லை நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நெல்லை வண்ணாரப்பேட்டை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நெல்லை நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம், அரசு போக்குவரத்து கழக சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சண்முகவேலுக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும், வழக்கு செலவாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இந்தத் தொகையை ஒரு மாதத்திற்குள் வழங்கவில்லை என்றால் 6.5 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும் என்றும் நெல்லை நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் உத்தரவிட்டது.