30 நாள் பணி, குறைந்தபட்ச ஊதியம் கேட்டு ஊர்காவல் படையினர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு
சென்னை: ஊர்காவல் படையினருக்கு மாதம் 30 நாட்கள் பணியும், போலீசார் வாங்கும் குறைந்தபட்ச ஊதியமும் வழங்க கோரி தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஊர்காவல் படையினர் 5 பேர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘2010ம் ஆண்டு ஊர்காவல் படையில் சேர்ந்தோம். உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் படி தமிழ்நாடு அரசு 2019ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையின்படி, இதுவரை ஊர்காவல் படையினருக்கு மாதம் 5 நாட்கள் பணி வழங்கப்பட்டதை 10 நாட்களாக உயர்த்தியது. 4 மணி நேர பணிக்கு ரூ.280 என்றும் 8 மணி நேர பணிக்கு ரூ.560 என்றும் நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், போலீசார் இந்த அரசாணையை அமல்படுத்தவில்லை. மாதத்துக்கு 5 நாட்கள் தான் பணி வழங்குகின்றனர்.
இந்நிலையில் மாதம் 5 நாட்கள் பணியாற்ற ஊர்காவல் படைக்கு ஆட்கள் தேவை என்று ஊர்காவல் படை கூடுதல் டி.ஜி.பி., நடவடிக்கை எடுக்கிறார். இதற்கு தடை விதிக்கவேண்டும். எங்களுக்கு 30 நாட்கள் பணி வழங்க கூடுதல் டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெ.சத்தியநாராயண பிரசாத் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.ஸ்ரீதர் ஆஜராகி ஊர்காவல் படையில் உள்ள இளைஞர்களின் வாழ்க்கையை வீண் அடிக்கும் விதமாக கூடுதல் டி.ஜி.பி. செயல்படுகிறார். பிற மாநிலங்களில் மாதம் முழுவதும் பணி வழங்குவதை நன்கு தெரிந்து இருந்தும், தமிழ்நாட்டில் ஊர்காவல் படையினருக்கு ஆண்டுக்கு 60 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படுகிறது என்று வாதிட்டார். ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.சத்தியன், உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த ஒன்றிய அரசு எல்லா மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது என்றார்.
ஊர்காவல் படை கூடுதல் டி.ஜி.பி., தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், உச்சநீதிமன்றம் போலீசுக்கு இணையாக ஊதியம் வழங்க உத்தரவிட்டாலும், ஊர்காவல் படை ஊதியம் என்பது மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. தமிழ்நாட்டில் ஊர்காவல் படையில் 1,721 இடங்கள் காலியாக உள்ளது. போலீஸ் கமிஷனர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் பரிந்துரையின்படி இதை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று கூறியிருந்தார். இதையடுத்து நீதிபதி சத்திய நாராயண பிரசாத் பிறப்பித்த உத்தரவில், ‘‘மனுதாரரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டால், ஊர்காவல் படை உருவாக்கப்பட்ட நோக்கமே வீணாகி போய்விடும். தமிழ்நாட்டில் மொத்தம் 15 ஆயிரத்து 622 ஊர்காவல் படையில் பணியிடங்கள் உள்ளன. 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் இந்த பணிக்கு வரலாம். பல ஓய்வு பெற்று விட்டதால், அதனால் ஏற்பட்டுள்ள காலியிடத்தை நிரப்ப கூடுதல் டி.ஜி.பி., நடவடிக்கை எடுத்துள்ளார். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
