Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கேரளாவில் இருந்து கொண்டு வந்த செப்டிங் டேங்க் கழிவுகளை சேரம்பாடியில் கொட்டிய டேங்கர் லாரி சிறைபிடிப்பு

பந்தலூர் : கேரளாவில் இருந்து கொண்டு வந்த செப்டிக் டேங்க் கழிவுகளை தமிழக எல்லையோரம் சாலையில் கொட்டிய டேங்கர் லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

பந்தலூர் அருகே நேற்று காலை கேரள மாநிலம் சுல்த்தான் பத்தேரி பகுதியில் இருந்து டேங்கர் லாரியில் வந்த சிலர் சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட சேரம்பாடி கோரஞ்சால் அருகே சப்பந்தோடு செல்லும் சாலையோரத்தில் செப்டிக் டேங்க் கழிவுகளை கொட்டினர். அப்போது யானை நடமாட்டம் குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு கொண்டிருந்த வன ஊழியர்களை கண்டதும் டேங்கர் லாரியை வேகமாக இயக்கி மீண்டும் கேரளா செல்ல முயற்சித்தனர்.

அப்போது சேரம்பாடி வனத்துறையினர் பின்தொடர்ந்து தங்கள் வாகனத்தில் வேகமாக சென்று தாளூர் சோதனைச்சாவடி பகுதியில் டேங்கர் லாரியை மடக்கி பிடித்து விசாரனை செய்தபோது டேங்கர் லாரியை ஓட்டி வந்த திருவாவூர் மாவட்டத்தை சேர்ந்த சுகன்(24) மற்றும் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரன் (42),சர்குணநாதன்(24),அய்யப்பன்(45)ஆகியோர் என்பது தெரிய வந்தது.

சேரம்பாடி வனச்சரகம் பொறுப்பு உதவி வனபாதுகாவலர் அரவிந்த் மற்றும் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் மனித கழிவுகளை கேரளாவில் இருந்து கொண்டு வந்து கொட்டியதை அவர்கள் ஒத்துக்கொண்டனர். அதன்பின் வனத்துறையினர் டேங்கர் லாரி மற்றும் சம்மந்தப்பட்ட நபர்களை சேரங்கோடு ஊராட்சி தலைவர் லில்லி ஏலியாஸ் மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார்,ஊராட்சி செயலாளர் சஜீத் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.‘மேலும் சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர்.

சேரங்கோடு ஊராட்சி நிர்வாகம் டேங்கர் லாரி மற்றும் சம்மந்தப்பட்ட நபர்களிடம் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் செப்டிக் டேங்க் கழிவுகளை கொட்டிச் சென்ற பகுதியில் ஜேசிபி இயந்திரம் வைத்து ஊராட்சி நிர்வாகம் மண் நிரப்பி, துர்நாற்றம் ஏற்படாமல் இருப்பதற்கான பணிகளை உடனே மேற்கொண்டனர்.பொதுமக்கள் கூறுகையில்: கேரளாவில் இருந்து செப்டிக் டேங்க் கழிவுகளை லாரி மூலம் கொண்டு வந்து மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளிலும் நீரோடைகளிலும் கொட்டி செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டு பொது சுகாதாரத்திற்கு பங்கம் ஏற்படுத்துபவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.