Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முருகப்பெருமானை வட இந்திய கடவுளாக சித்தரிப்பதா? வரலாற்றை திரித்து, தமிழர்களை இழிவுபடுத்தினால் கடும் எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும்: சீமான் எச்சரிக்கை

சென்னை: முருகப்பெருமானை வட இந்திய கடவுளாக சித்தரிப்பதா என்றும், வரலாற்றை திரித்து, தமிழர்களை இழிவுபடுத்தினால் கடும் எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சீமான் எச்சரித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் தள பதிவு:

தமிழ் இறையோன் முருகப்பெருமானை மையப்படுத்தி என்.டி.ஆர்-திரிவிக்ரம் என்ற பெயரில் ஆந்திராவில் தயாரிக்கப்படும் திரைப்படத்தில், ‘தமிழர் இறையோன்’ முருகன் வடபுலத்தில் பிறந்தவர் என்ற கருத்துருவாக்கத்துடன் உருவாவதை உறுதிப்படுத்தும் விதமாகப் படக்குழு பதிவிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கலைப்படைப்பு என்ற பெயரில் அடிப்படை புரிதலற்று, இதுபோன்ற வரலாற்றுத் திரிபுகளை உண்மையெனக் கட்டமைக்க முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது. வரலாற்றின் வீதிகளில் தொடர்ச்சியாக அடிமைப்படுத்தப்பட்டு, அழித்தொழிக்கப்பட்ட இனத்தின் மறைக்கப்பட்ட வீரவரலாற்றையும், பண்டைய அடையாளங்களையும் மீட்டெடுக்கும் பெரும்பணியைச் செய்து மீண்டெழத் துடிக்கும் நேரத்தில், கற்பனை படைப்புகள் மூலம் இதுபோன்று உண்மைக்குப் புறம்பான திரிபுகள் திணிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

முருகப்பெருமான் வடபுலத்தில் பிறந்தார் என்பது போன்ற கட்டுக்கதைகளை உருவாக்கி அவற்றை கலை என்ற பெயரில் திரித்துத் திணிக்க முயல்வதை, படக்குழு உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லையென்றால் மிகக் கடுமையான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கின்றேன். தமிழினத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி இதே கருத்துருவாக்கத்தோடு இப்படம் உருப்பெற்று வெளிவந்தால் தமிழ்த்திரையரங்க உரிமையாளர்கள் இதனை தமிழ்நாட்டில் வெளியிட மாட்டோம் என்ற ஒருமித்த முடிவினை எடுக்க வேண்டும். இல்லையென்றால், தமிழ்நாட்டில் எந்தவொரு திரையரங்கிலும் இத்திரைப்படத்தைத் திரையிடவிடாது மிகப்பெரிய போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.