உரிமம் பெறாமல் விதை விற்பனை; நர்சரி, பழநாற்று பண்ணை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அதிகாரி எச்சரிக்கை
சென்னை: சென்னை மண்டல விதை ஆய்வு துணை இயக்குநர் ஆ.வானதி அறிக்கையில் கூறியிருப்பதாவது; விதைகள் கட்டுப்பாடு ஆணை, 1983 பிரிவு 3ன் படி, விதை வணிகம் மற்றும் நர்சரிகளில் காய்கறி நாற்றுகள் மற்றும் பழ மரக்கன்றுகள் விற்பனை செய்ய விதை விற்பனை உரிமம் கட்டாயமாகும். பொதுமக்களுக்கு தரமான நாற்றுகள் மற்றும் மரக்கன்றுகள் கிடைப்பதை உறுதிசெய்யும் நோக்கில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இயங்கிவரும் உரிமம் இல்லாத நர்சரிகள், குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உரிமம் இல்லாத நர்சரிகள், பழநாற்றுப் பண்ணைகளுக்கு உடனடியாக உரிமம் பெற்றுக் கொள்ளுமாறு எச்சரிக்கை விடப்படுகிறது.
சென்னை, ஈக்காட்டுத்தாங்கல், எண்.55, திருவிக.தொழிற்பேட்டை, டான்காப் கட்டிடத்தில் (தரைத்தளம்), உள்ள விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்பு துறையின் சென்னை மண்டல விதை ஆய்வு துணை இயக்குநர் அலுவலகத்தை அணுகி உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும். உரிமம் பெறாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.


