Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

24 ஆயிரம் ஆண்டுகள் உறைந்து கிடந்த ‘ஸாம்பி’ புழுவை உயிர்ப்பித்த விஞ்ஞானிகள்

வடகிழக்கு சைபீரியாவின்(Siberia) உறைபனி பகுதியில் பல்லாயிரம் ஆண்டுகளாக உறைந்து கிடந்த மிகச்சிறிய புழுவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அது பல்லாயிரம் ஆண்டுகள் ஆழ்ந்த உறக்கத்திற்கு பிறகு மீண்டும் உயிர் பெற்று ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சைபீரியாவின் அலசேயா நதி (Alazeya River) அருகில் பூமிக்கு அடியில் இருந்து நிரந்தரமான பனிப்பாறைக்குள் இந்த நுண்னுயிரை ரஷ்யா விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். எடோமா (Yedoma) என்று அழைக்கப்படும் பனிப்பாறை சுமார் -20 டிகிரி செல்சியஸ் குளிரில் அந்த புழுவை இத்தனை காலமும் பாதுகாப்பாக வைத்திருந்தது. இவை உலகம் முழுவதும் நன்னீர் பகுதியில் காணப்படும் நுண்ணுயிர்கள்.

ரேடியோ கார்பன் பரிசோதனையில் இந்த புழு சுமார் 24,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தது என்பது உறுதியாகின்றது. ஆய்வகத்தில் பனி உருகி இயல்பு நிலைக்கு வந்த புழு அடுத்து சில நாட்களில் ஆச்சரியமான மாற்றங்களை வெளிப்படுத்தியது. அது சுறுசுறுப்பாக நகரவும் உணவு உட்கொள்ளவும் ஆரம்பித்தது.

அதன் பிறகு மிகவும் வியப்பான விஷயம் என்னவென்றால் இதற்கு துணை எதுவும் தேவைப்படவில்லை. அந்த புழு துணை இல்லாமல் இனப்பெருக்கம் (Asexual Repriduction) செய்யத் தொடங்கியது. மேலும், குட்டிப் புழுக்களும் அதன் தாயைப் போலவே எந்தவித குறைபாடுகளும் இல்லாத உடல் அமைப்பைக் கொண்டிருந்தன. பொதுவாக பாக்டீரியாக்களை தவிர மற்ற உயிரினங்களுக்கு இவ்வளவு காலம் உயிர் வாழும் சக்தி இருக்காது.

ஆனால், இந்த புழுவுக்கு நரம்பு, தசை, செரிமான மண்டலம் என அனைத்தும் இருப்பதால் எப்படி இவ்வளவு காலம் DNA சிதையாமல் பிழைத்தது என்பதுதான் ஆய்வாளர்களுக்கு பெரிய ஆச்சிரியத்தை கொடுத்துள்ளது. ஊடகங்கள் இது ZOMBIE புழு என்று அழைத்தாலும் ஆய்வின் முதன்மை அதிகாரி ஸ்டாஸ் மாலவின் (Stas Malavin) இதை மறுக்கிறார்.

இந்த புழு சாகவில்லை அதன் உடல் செயல்பாடுகளை நீண்ட காலத்திற்கு ஒரு ஸ்டாப் செய்து வைத்திருந்தது என்று அவர் கூறுகிறார். எதிர்காலத்தில் மனித உறுப்புகளை பாதுகாப்பாக உறையவைத்து தேவைப்படும்போது மீண்டும் பயன்படுத்த இது போன்ற ஆராய்ச்சிகள் ஒரு பெரிய நம்பிக்கை தரும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.