Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கல்வி கட்டண விவரங்களை பள்ளிகள் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து வழக்கு!!

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டண விவரங்களை, பள்ளிகளின் விளம்பர பலகைகளில் வெளியிடுவதை கட்டாயமாக்கும்படி, தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் மே 25ஆம் தேதி உத்தரவிட்டது.

தனியார் மெட்ரிகுலேஷன், மேல்நிலைப் பள்ளிகளில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்கள் தொடர்பாக தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம், மாணவர்கள் கல்விக் கட்டண விவகாரத்தில் கல்வி நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மை மிக அவசியம் எனக் குறிப்பிட்டு, அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டண விவரங்களை, தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளின் விளம்பர பலகைகளில் விளம்பரப்படுத்துவதையும், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்திலும் வகுப்பு வாரியாக கட்டணத்தை அச்சிட்டு வழங்குவதையும் கட்டாயமாக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு உத்தரவிட்டது.

அதன்படி, ஜூன் 5ஆம் தேதிக்குள் கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிடும்படி, அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ, பிற வாரிய பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் இயக்குனர் ஜூன் ஒன்றாம் தேதி சுற்றறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில் மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவையும், அதன்படி தனியார் பள்ளிகள் இயக்குனர் பிறப்பித்த அறிவிப்பையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கே.பழனியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்கள் மீது அதிகார வரம்பு இல்லாமல் மாநில தகவல் ஆணையம் விசாரித்த வழக்கில் தனியார் பள்ளிகளின் இயக்குநரை பொதுத் தகவல் அதிகாரியாக செயல்படுமாறு சேர்த்துள்ளது; ஆனையம் பிறப்பித்த உத்தரவின்படி தனியார் பள்ளிகள் இயக்குனரும் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்துமா என்பது ஆராயப்படவிலலை; அந்தச் சட்டத்தின் கீழ் தனியார் சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் பொது அதிகார அமைப்புகளாக இல்லாத நிலையில், அவற்றுக்கு ஆணையத்திற்கு அதிகார வரம்பு இல்லை. தகவல் அறியும் உரிமை மனு மீதான தீர்ப்பையும் தாண்டி, சட்டமியற்றும் மற்றும் ஒழுங்குமுறை சார்ந்த வழிகாட்டுதல்களைப் பிறப்பித்ததன் மூலம் அதிகார வரம்பு மீறப்பட்டுள்ளது. தனியார் சுயநிதிப் பள்ளிகளுக்கு எதிராக, அடிப்படை தகவல் அறியும் சட்டத்தின் வரம்பிற்கு அப்பாற்பட்டதாக இருக்கும் போது தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு நிலைக்கத்தக்கதல்ல.

வெளிப்படையான சட்டப்பூர்வ விதிமுறை இல்லாத நிலையில், தனியார் சுயநிதிப் பள்ளிகளின் கட்டணக் கட்டமைப்பைப் பொதுமக்களுக்கு வெளியிடுமாறு கட்டாயப்படுத்தும் உத்தரவைப் பிறப்பிப்பதற்கு தனியார் பள்ளிகள் இயக்குநருக்குச் சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை. சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் மாநில பள்ளிக் கல்வித் துறையின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டவையா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது; முன் அறிவிப்போ விசாரணையோ இல்லாமல் நான்கு நாட்களுக்குள் ஆணையத்தின் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்பது, இயற்கை நீதிக்கு முரணானது என குறிப்பிட்டுள்ளார்.

விண்ணப்பத்தின் வரம்பை மீறி மாநில தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு அதிகார வரம்பை மீறல் என்பதால் அந்த உத்தரவையும், அதனடிப்படையில் தனியார் பள்ளிகள் இயக்குனர் பிறப்பித்த சுற்றறிக்கையையும் ரத்து செய்ய வேண்டும் எனவும், இந்த வழக்கு முடியும் வரை அவற்றை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.