Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சாத்தூர் அருகே அதிகாலை பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து

ஏழாயிரம்பண்ணை: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அடுத்த ஏழாயிரம்பண்ணை அருகே முத்தாண்டியபுரத்தில் ரகுநாதன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோன் உள்ளது. அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த குடோனில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை இருப்பு வைத்திருந்தனர். இந்த குடோனில் நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், போலீசார் மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து ஏழாயிரம்பண்ணை, சாத்தூர், வெம்பக்கோட்டை தீயணைப்புத்துறையினர் 3 வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதிகாலை 4 மணிக்கு வெடிக்க தொடங்கிய பட்டாசுகள் காலை 7 மணி வரை, சுமார் 3 மணி நேரம் வெடித்துக் கொண்டே இருந்தன. தீயணைப்புத்துறையினர் நீண்ட போராட்டத்துக்கு பின் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் குடோனின் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை, ஜன்னல்கள் உடைந்து சேதமடைந்தன. அருகில் இருந்த வீடுகளின் ஜன்னல்கள், சுவர்கள் சேதமடைந்தன.

மேலும், குடோனில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்துச் சிதறின. அதிர்ஷ்டவசமாக குடோனில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. குடியிருப்பு பகுதி அருகே குடோன் அமைந்திருந்தாலும், சம்பவம் நடந்தது அதிகாலை என்பதால் பொதுமக்கள் யாரும் அப்பகுதிக்கு செல்லவில்லை. சம்பவ இடத்தை சாத்தூர் வருவாய்த்துறையினர் மற்றும் ஏழாயிரம் பண்ணை போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிந்து குடோன் உரிமையாளர்கள் ரகுநாதன், மணிசங்கர் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

* ஒரு வாரத்தில் 3வது விபத்து

கடந்த சனிக்கிழமை சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பெண்கள் உயிரிழந்தனர். 2 தினங்களுக்கு முன் சாத்தூர் அருகே மின்னல் தாக்கி பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டு அறை தரைமட்டமானது. தற்போது பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 பட்டாசு வெடி விபத்துகள் அடுத்தடுத்து ஏற்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.