சசிகலாவுக்கு எதிரான அன்னிய செலாவணி வழக்கு எழும்பூர் நீதிமன்றம் விரைந்து முடிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
சென்னை: ஜெ.ஜெ. டிவிக்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியதில் மோசடி செய்ததாக சசிகலா உள்ளிட்டோர் மீது அன்னிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, எழும்பூர் பொருளாதார குற்ற வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பட்டியலில் முதல் எதிரியாக ஜெ.ஜெ. தொலைக்காட்சி, இரண்டாவது எதிரியாக தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் பாஸ்கரன், மூன்றாவது எதிரியாக தொலைக்காட்சி தலைவர் மற்றும் இயக்குனர் சசிகலா என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், எதிரிகள் பட்டியலில் தன்னுடைய பெயரை முதல் எதிரியாக மாற்றியதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு பட்டியலில் முதல் எதிரியாக மாற்றியதால் விசாரணையில் எந்த பாதிப்பும் இல்லை என கூறி சசிகலாவின் மனுவை தள்ளுபடி செய்தனர்.மேலும், எழும்பூர் பொருளாதார குற்ற வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும். வழக்கு விசாரணைக்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


