Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

மதுரை மாநகராட்சியை கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

மதுரை: மதுரை மாநகராட்சியை கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் இன்று காலை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை மாநகராட்சியில் திடக்கழிவுகளை மேலாண்மை செய்யும் பணி, தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக குப்பைக்கு பதில் மண் மற்றும் கற்களை அள்ளிச்சென்று எடைகாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் அந்த நிறுவனம் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. வரும் ஆகஸ்ட் மாதத்துடன் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவடைகிறது. இதனால், திடக்கழிவு மேலாண்மை பணிகளில் தனியார் நிறுவனம் சுணக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

இதனால், நகர் பகுதி முழுவதும் பல இடங்களில் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. வீடுகளிலும் தினசரி குப்பை சேகரிக்கும் நிலை மாறி, நான்கு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குப்பை சேகரிக்கப்படுகிறது. மேலும், தூய்மைப் பணியாளர்களுக்கான ஊதிய பிடித்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளால் தனியார் நிறுவனம் ஈடுபட்டு குடைச்சல் கொடுத்து வருகிறது. இந்த நிலையில், மாநகராட்சி கமிஷனர் கவுரவ் குமார் ஒவ்வொரு தூய்மைப் பணியாளரும் தினமும் தலா 100 கிலோ வீதம் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்து தரவேண்டும் என வாய்மொழி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து சிஐடியு, விசிக உள்ளிட்ட அனைத்து மாநகராட்சி தொழிற்சங்கத்தினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் இன்று காலை மாநகராட்சி அண்ணா மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது திடக்கழிவு மேலாண்மையில் தனியார் நிறுவனத்திற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். இதையடுத்து தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து மாநகராட்சி கமிஷனர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால், மாநகராட்சி அலுவலகம் முன் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.