தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை, தமிழ்நாடு அரசின் நலத்துறை ஆகியவை சார்பில்“பல்வேறு பயிர்களுக்கு மண் வளத்திற்கும் பயிர் மகசூல் இலக்கிற்கும் ஏற்ற உரப் பரிந்துரைகள்” என்ற தலைப்பில் மண் பரிசோதனை ஆய்வகத்தில் பணிபுரியும் வேளாண் அலுவலர்களுக்கான பயிற்சித் திட்டம் வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் செல்வி வரவேற்றார். அப்போது அவரது உரையில், நிலையான விவசாயத்தை ஊக்குவிப்பதிலும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதிலும் மண் வளத்திற்கும் பயிர் மகசூல் இலக்கிற்கும் ஏற்ற உரப் பரிந்துரை தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். தொடக்க அமர்வின்போது, பயிற்சி பெறுபவர்கள், தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, மண் பரிசோதனை ஆய்வகங்கள் மற்றும் நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகங்களில் மண் பகுப்பாய்வு மற்றும் ஆலோசனை சேவைகளில் தங்கள் தற்போதைய செயல்பாடுகள் குறித்த கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
இயற்கை வள மேலாண்மை இயக்குநரகத்தின் முன்னாள் இயக்குநர் சாந்தி பேசுகையில், 1980களில் இருந்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மண் பரிசோதனை முயற்சிகளின் பரிணாம வளர்ச்சியை கோடிட்டுக் காட்டினார். மண்வளத்திற்கும் மனித ஆரோக்கியத்திற்கும் இடையிலான நெருங்கிய தொடர்பையும் அவர் வலியுறுத்தினார். மண் பரிசோதனையில் லட்சுமிநாராயணன், முனுசாமி மற்றும் தனபாலன் மோசி உள்ளிட்ட முன்னாள் நிபுணர்களின் பங்களிப்புகளை அவர் எடுத்துரைத்தார். இயற்கை வள மேலாண்மை இயக்குநர் பாலசுப்பிரமணியம் கலந்துகொண்டு தலைமை உரை ஆற்றினார். அப்போது அவர் விவசாயத்தில் மண் பரிசோதனையின் முக்கியப் பங்கை வலியுறுத்தியதோடு, பசுமைப் புரட்சியிலிருந்து நவீன சாகுபடிகள் வரை உரப் பயன்பாட்டுத் திறனில் ஏற்பட்ட மாற்றங்களையும் விவரித்தார். மேலும் சமநிலையற்ற உரப் பயன்பாட்டின் சுற்றுச்சூழல் விளைவுகளை அடிக்கோடிட்டுக் காட்டினார். உரங்கள் மற்றும் கரிம உரங்களின் ஒருங்கிணைந்த பயன்பாட்டின் அவசியத்தையும் எடுத்துரைத்தார். பரிசோதனை அடிப்படையிலான உரப் பரிந்துரை மற்றும் மகசூல் இலக்கு அணுகுமுறை களைப் பின்பற்ற வலியுறுத்திய அவர், இதுவரை 37 பயிர்களுக்கும் 10 பயிர் சுழற்சிகளுக்கும் மண் உரப் பரிசோதனை அடிப்படையிலான பரிந்துரை சமன்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளது குறித்தும் பேசினார்.



