அகமதாபாத்: இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் ஐபிஎல்லில் கடந்த 6 சீசன்களாக ஆர்சிபி அணிக்காக ஆடி வந்த நிலையில் இந்த முறை அவரை 12.15 கோடி ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. குஜராத் தனது முதல் போட்டியில், வரும் 25ம்தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோத உள்ளது. பயிற்சிக்கிடையே சிராஜ் அளித்த பேட்டி: புதிய சீசனுக்கு முன்னதாக குஜராத் அணியில் இணைவது ஒரு நல்ல உணர்வாகும். கடினமான காலங்களில் எனக்கு விராட் கோஹ்லி நல்ல ஆதரவை வழங்கியிருக்கிறார். அதனால் ஆர்சிபி அணியை விட்டு வெளியேறிய போது அந்த உணர்வு மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாக இருந்தது.
ஆனால் குஜராத் அணியில் கில்லின் கீழ் தற்போது எங்களுக்கு ஒரு அருமையான அணி இருக்கிறது. தற்போது பந்துவீச்சாளர்கள் உமிழ் நீரை பயன்படுத்தலாம் என்கிற நல்ல செய்தி பவுலர்களுக்கு பெரிய நன்மையை அளிக்கும். ஏனென்றால் பந்தின் மீது உமிழ்நீரை பயன்படுத்தும்போது தான் அதில் ரிவர்ஸ் ஸ்விங்கை கண்டறிவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். ஏனென்றால் ஸ்விங்கைப் பெறுவதற்கு பந்தை சட்டையில் தேய்ப்பது உதவாது. ஆனால் பந்தில் உமிழ்நீரை பயன்படுத்தும் போது அந்த ஸ்விங் பெற எளிதாக இருக்கும். மேலும் இந்த விஷயம் முக்கியமானது” என்றார்.
