Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுங்க சின்மயி கருத்துக்கு பேரரசு பதிலடி

சென்னை: மோகன்.ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, ரக்‌ஷனா, நட்டி நட்ராஜ், ஒய்.ஜி.மகேந்திரன், ‘நாடோடிகள்’ பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் ‘திரௌபதி 2’. கடந்த 1ம் தேதி ஜிப்ரான் இசையில் இப்படத்தின் ‘எம்கோனே’ என்ற பாடல் சின்மயி குரலில் வெளியானது. பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே சின்மயி தனது எக்ஸ் தளத்தில், ‘‘எம்கோனே’ பாடலை பாடியதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். 18 வருடங்களாக ஜிப்ரானை எனக்கு தெரியும். அவரது ஸ்டுடியோவில் இருந்து அழைப்பு வந்ததால் வழக்கம்போல பாட சென்றேன். பாடலை பாடி கொடுத்துவிட்டு நான் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

இப்போதுதான் அந்த பாடலில் உள்ள அர்த்தம் எனக்கு புரிகிறது. இது முன்னரே தெரிந்திருந்தால் இந்த பாடலை நான் பாடியிருக்க மாட்டேன். இந்த பாடல் எனது கொள்கைகளுக்கு முரணானவை” என்று பதிவிட்டார். சின்மயியின் இந்த பதிவு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், சின்மயியின் கருத்துக்கு பதிலளித்த இயக்குனர் பேரரசு, ‘‘இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. பாடியதற்கு பெற்ற சம்பளத்தை திருப்பி கொடுத்து, உங்கள் குரலை நீக்க சொல்லலாம். பணமா முக்கியம்? கொள்கை தானே முக்கியம். தேவையெனில் மோகன்.ஜி வேறு ஒரு பாடகரின் குரலை பதிவு செய்துகொள்ளும் வாய்ப்பு இருக்கிறது’’ என்று பேசியுள்ளார்.

இது தொடர்பாக இயக்குனர் மோகன்.ஜி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘‘சின்மயி குரலில் இந்த பாடல் பதிவாக வேண்டும் என நான் விருப்பப்பட்டு அவரை பாட வைத்தேன். பாடல் வெளியான சில மணி நேரத்தில் சின்மயிக்கு எதிரான கருத்துகள் இணையத்தில் பரவ தொடங்கியது. இதுகுறித்து என்னிடமோ அல்லது இசையமைப்பாளர் ஜிப்ரானிடமோ எந்தவொரு விளக்கமும் கேட்காமல் சின்மயி அந்த பதிவை வெளியிட்டுள்ளார். ‘எம்கோனே’ பாடல் இணையத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துவிட்டது. சின்மயி மன்னிப்பு கேட்டதற்கான காரணம் என்ன என்பது எனக்கு தெரியவில்லை. அவர் அந்த பதிவை நீக்க வேண்டும் அல்லது, அதற்கான விளக்கத்தை தர வேண்டும்\\” என பேசியுள்ளார். இதுபோன்ற சின்ன விஷயங்களை பெரிதுபடுத்தி பூதாகரமாக்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் சின்மயி. அதேபோலத்தான் இந்த பாடல் விவகாரத்தையும் பெரிதுபடுத்தி சர்ச்சையாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் என நெட்டிசன்கள் சின்மயியை கடுமையாக சாடி வருகின்றனர்.