10 ஏக்கரில் சப்ஜா சாகுபடி!
சப்ஜா பயிரிடும் நிலம் சமனாக இருக்க வேண்டும். அதேபோல், நன்கு உழப்பட்டு மண் உதிரியாக இருக்க வேண்டும். அதுபோல் எனது நிலத்தை தயார்படுத்தினேன். நிலம் தயார் செய்த பின்பு அடி உரமாக ஒரு ஏக்கருக்கு காம்ப்ளக்ஸ் மற்றும் டிஏபி உரம் ஒரு மூட்டை கொடுக்க வேண்டும். அதன்பின், இந்த விதைகளை விதைக்கலாம். அதாவது, சப்ஜாவைப் பொறுத்தவரை இரண்டு முறையில் நடலாம். ஒன்று நாற்றுமுறை நடவு. இன்னொன்று விதைத்தல் முறை. நாற்று விட்டு நடவு செய்தால் 90 நாட்களில் அறுவடை செய்யலாம். நேரடியாக விதைத்தால் 120 நாட்களில் அறுவடை செய்யலாம். ஒருமுறை சப்ஜா விதைகளை விதைத்தால் இரண்டு முறை பயனடையலாம். அதாவது, அறுவடை செய்யும்போது செடியின் அடிப்பகுதியை பூமியிலே விட்டுவிட்டு மேலே உள்ள செடியை வெட்டி எடுப்பதால் மீதமிருக்கிற செடி வளர்ந்து இன்னொரு முறையும் நமக்கு விளைச்சல் கொடுக்கும். இந்த செடிக்கு 8 நாட்களுக்கு ஒரு தண்ணீர் கொடுக்க வேண்டும். அதேபோல், இரண்டு முறை களை எடுக்க வேண்டும். கோடைக்காலங்களில் அறுவடை செய்வதே சிறந்தது. ஏனெனில் மழை நேரத்தில் அறுவடை செய்தால் விளைச்சல் எடுக்க முடியாது. நான் ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ விதைகள் விதைத்து 450 கிலோ விதைகளை மகசூலாக எடுத்தேன். ஒரு கிலோ விதை தற்போது மார்க்கெட் நிலவரப்படி ரூ.200ல் இருந்து ரூ.250 வரை விற்பனை ஆகிறது. அதேபோல், இந்த விவசாயத்தில் ஒரு ஏக்கருக்கு செலவு எனப் பார்த்தால் ரூ.15 ஆயிரம் வரை ஆகும். ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை வருமானம் பார்க்கலாம். ஜூஸ் மற்றும் மருத்துவப் பயன்களுக்காக இந்த விதைகள் அதிகம் தேவைப்படுகிறது. இதனால் இதனை எளிதாக விற்பனை செய்துவிடலாம்’’ என மகிழ்ச்சியோடு கூறி முடித்தார் கமல்கேசவன்.
சப்ஜா செடிகளில் இருந்து விதைகளை பிரித்தெடுப்பதற்கு இப்போது நவீனக் கருவிகள் வந்துவிட்டன. இதனால் அறுவடைப் பணி எளிதாகி இருக்கிறது. சப்ஜாவில் மறுதாம்பு முறையில், இரண்டாவது அறுவடை எடுக்கும்போது கூடுதல் மகசூல் கிடைக்கும்.
சப்ஜா சாகுபடியில் ஒரு ஸ்பெஷல் இருக்கிறது. இந்தச் செடிகளை ஆடு, மாடுகள் மேயாது. அதேபோல் எந்த விதமான பூச்சித் தாக்குதலும் இருக்காது. இதனால் பெரிதாக கவலைப்படத் தேவை இருக்காது.
சப்ஜா பொதுவாக நேரடி விதைப்பாகவும், நாற்று பாவி நடவு முறையிலும் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் நாற்று நடவு முறையே சிறந்தது என்கிறார் கேசவன். இந்த முறையில் விளைச்சல் கூடுதலாக கிடைக்கும் என்கிறார்.