சபரிமலையில் தங்கம் திருட்டு முன்னாள் நிர்வாக அதிகாரி அதிரடி கைது: கைதானவர்கள் எண்ணிக்கை 3ஆக உயர்வு
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் திருடியது தொடர்பாக முன்னாள் நிர்வாக அதிகாரி சுதீஷ்குமாரை நேற்று சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்து சிறையில் அடைத்தது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பதிக்கப்பட்ட தங்கத்தகடுகளில் இருந்து தங்கம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி குற்றப்பிரிவு ஏடிஜிபி வெங்கடேஷ் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த 2019ம் ஆண்டு தங்கத்தகடுகளை சென்னைக்கு கொண்டு சென்ற உண்ணிகிருஷ்ணன் போத்தி மற்றும் தங்கத்தகடுகளை செம்புத்தகடுகள் என்று சான்றிதழ் வழங்கிய தேவசம் போர்டு முன்னாள் துணை கமிஷனர் முராரி பாபு ஆகியோர் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் தங்கம் திருடப்பட்டது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு பல்வேறு முக்கிய விவரங்கள் கிடைத்தன.
கடந்த 2019ம் ஆண்டில் சீரமைப்புப் பணிகள் நடத்தவேண்டும் என்று கூறி சபரிமலையில் இருந்து 2 துவாரபாலகர் சிலைகள் மற்றும் கதவு, நிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கத்தகடுகள் ஆகியவை சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன. இவை அனைத்தும் செம்புத்தகடுகள் என்று சபரிமலை கோயில் நிர்வாக அதிகாரியாக அப்போது பணியில் இருந்த முராரி பாபு சான்றிதழ் கொடுத்திருந்தார். அந்த சமயத்தில் சபரிமலை கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்த சுதீஷ்குமாரும் அந்த சான்றிதழில் கையெழுத்து போட்டிருந்தார்.
மேலும் கடந்த பல வருடங்களாக சபரிமலையில் பணிபுரிந்து வரும் சுதீஷ்குமாருக்கு அவை தங்கத்தகடுகள் என்று நன்றாகவே தெரியும். இதனால் உண்ணிகிருஷ்ணன் போத்தி, முராரி பாபு ஆகியோருடன் சுதீஷ்குமாரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுதீஷ்குமரை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்காக அழைத்துச் சென்றது. திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் வைத்து நடந்த பல மணிநேர விசாரணைக்குப் பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து சுதீஷ்குமாரை போலீசார் பத்தனம்திட்டா மாவட்டம் ரான்னி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் உண்ணிகிருஷ்ணன் போத்தி, முராரி பாபு, சுதீஷ்குமார் மற்றும் 2019ம் ஆண்டு திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவராக இருந்த பத்மகுமார், 2 உறுப்பினர்கள் உள்பட 10 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது சுதீஷ்குமார் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இதுவரை இந்த வழக்கில் கைதானவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.