Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ரஷ்ய ராணுவத்துக்கு உதவியதாக குற்றச்சாட்டு 4 இந்திய நிறுவனங்கள் மீதான தடை ரத்து: டிரம்ப் அரசு உத்தரவு

வாஷிங்டன்: உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்துக்கு உதவிய குற்றச்சாட்டில் 4 இந்திய நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை அமெரிக்கா நீக்கி உள்ளது. 5 ஆண்டுகளை கடந்தும் நீடிக்கும் உக்ரைன் ரஷ்யா போரில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதம், நிதி உதவிகளை அளித்து வருகிறது. இதேபோல், ரஷ்யா ராணுவம், தொழில்துறை தளத்துக்கு உதவியதாக சீனா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தியா உள்பட பல நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மீது அமெரிக்கா தடை விதித்தது.

ரஷ்ய ஆயுத அமைப்புகளுக்கு தேவையான முக்கிய தொழில்நுட்ப கூறுகள், டிரோன்கள் மற்றும் விமான உதிரி பாகங்கள் ஆகியவற்றை வழங்குவதை தடை செய்வதே இதற்கான முக்கிய நோக்கம். அந்த வகையில் இந்தியாவில் ஐதபாராபாத்தை தளமாக கொண்ட ஆர்ஆர்ஜி இன்ஜினியரிங் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் ரஷ்யாவை சேர்ந்த ஆர்டெக்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு 100க்கும் மேற்பட்ட நுண்மின்னணு பொருள்களை வழங்கியதாகவும், பல்வேறு ரஷ்ய உற்பத்தி நிறுவனங்களுக்கு இயந்திர கருவிகளை லோகேஷ் மெஷின்ஸ் அனுப்பியதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டி இருந்தது.

இதேபோல், ரேடார் கருவிகள், வானொலி தொலைக்கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் மின்சார கருவிகளை சவுர்யா ஏரோநாட்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் அனுப்பியதாகவும், ரோலர் பியரிங்க்ஸ் மற்றும் ரோலர் அசெம்பிளிகள் உள்ளிட்ட உயர் முன்னுரிமையுடைய இரட்டை பயன்பாட்டு உபகரணங்களை ரஷ்ய நிறுவனங்களுக்கு கேலக்சி பியரிங்க்ஸ் ஏற்றுமதி செய்ததாவும் குற்றம்சாட்டி அமெரிக்கா தடை விதித்தது.

தற்போது ஆர்ஆர்ஜி இன்ஜினியரிங் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் லோகேஷ் மெஷின்ஸ் லிமிடெட், கேலக்சி பியரிங்க்ஸ் மற்றும் சவுர்யா ஏரோநாட்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. அமெரிக்க கருவூல துறை எந்தவித காரணங்களையும் குறிப்பிடாமல், எஸ்டிஎன்(தடை செய்யப்பட்டவர்கள்) பட்டியலில் இருந்து 4 நிறுவனங்களில் பெயர்களை அகற்றி உள்ளது. இதனால் இந்த நிறுவனங்கள் அமெரிக்காவிலுள்ள தங்கள் சொத்துகளை முடக்குவதிலிருந்து தப்பிக்க முடியும். அமெரிக்க நிறுவனங்கள், தனி நபர்களிடம் தடையின்றி வர்த்தகம் செய்ய முடியும் என கூறப்படுகிறது.