ஹத்ராஸ்: உத்தரப்பிரதேசத்தில் வியாபாரி ஒருவரின் வீட்டில் இருந்து நாணயங்கள் கொண்ட சுமார் 100 மூட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் நயாகஞ்ச் பகுதியில் நவீன் குமார் என்பவர் ஸ்டேஷனரி கடை வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் அவர் பெருமளவில் ரூபாய் நாணயங்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைதொடர்ந்து நவீன் குமாரின் ஸ்டேஷனரி கடை மற்றும் அனுமன் காலியில் உள்ள அவரது வீட்டில் அரசு அதிகாரிகள் சோதனை செய்தனர். கடந்த ஒன்றாம் தேதி மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் நடத்திய இந்த சோதனையின்போது ஒரு ரூபாய் முதல் 10 ரூபாய் வரையிலான நாணயங்கள் கொண்ட சுமார் 106 மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வளவு நாணயங்களையும் எண்ணுவது சாத்தியமற்றதாக இருந்ததால் அவை எடை போடப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட நாணயங்களின் மொத்த எடை 5,666 கிலோவாகும். இவ்வளவு நாணயங்கள் ஏன் சேமித்து வைக்கப்பட்டன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் தலைமறைவான கடையின் உரிமையாளர் நவீன் குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


