Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பள்ளிப்பட்டு அருகே பீரோவை உடைத்து பத்திரப்பதிவு எழுத்தர் வீட்டில் 98 பவுன், ரூ.1 லட்சம் கொள்ளை

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே கிராமத்தில் நள்ளிரவு நேரத்தில் பூட்டியிருந்த வீடு மற்றும் பீரோவை மர்ம நபர்கள் உடைத்து, அதில் 98 சவரன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

பள்ளிப்பட்டு அருகே கர்லம்பாக்கம், பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் பழனி (62). பத்திரப்பதிவு எழுத்தர் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இவரது மகன் டாக்டர் சாய்கணேஷுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, தனது குடும்பத்துடன் ஐதராபாத்தில் தங்கி டாக்டர் சாய்கணேஷ் வேலைபார்த்து வருகிறார். பழனியின் மகள், ஆந்திர மாநிலத்தில் உள்ள புத்தூரில் குடும்பத்துடன் வசிக்கிறார். இதனால் கர்லம்பாக்கம் கிராமத்தில் உள்ள அடுக்குமாடி வீட்டில் பழனியும் அவரது மனைவி ரஜினியும் தனியே வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் கிராமத்து வீட்டை பூட்டிவிட்டு, புத்தூரில் உள்ள மகளின் வீட்டுக்கு பழனியும் அவரது மனைவியும் சென்றிருந்தனர். இதற்கிடையே கடந்த 2 நாட்களாக பத்திரப்பதிவு எழுத்தரின் வீடு பூட்டப்பட்டு இருப்பதை மர்ம நபர்கள் நோட்டமிட்டு உள்ளனர். இதைத் தொடர்ந்து, பழனியின் வீட்டின் முன்பக்க கதவை நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். மேலும், வீட்டுக்குள் இருந்த பீரோவை உடைத்து, அதில் வைத்திருந்த 98 சவரன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து தப்பி சென்றுள்ளனர்.

பின்னர் நள்ளிரவு 2 மணியளவில் எதிர்வீட்டுக்காரர் எழுந்து வந்து பார்த்தபோது, பத்திரப்பதிவு எழுத்தர் பழனியின் வீடு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியானார். இதுபற்றி பழனிக்கு தகவல் அளித்துள்ளார். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட, இன்று காலை பத்திரப்பதிவு எழுத்தர் பழனி முன்னிலையில் திருத்தணி டிஎஸ்பி (பொறுப்பு) கந்தன், ஆர்.கே.பேட்டை இன்ஸ்பெக்டர் ஞானசேகர், தனிப்பிரிவு உதவி காவல் ஆய்வாளர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்து விசாரித்தனர். மேலும், கைரேகை நிபுணர்கள் வந்து, வீட்டுக்குள் மர்ம நபர்களின் விரல் ரேகைகளை பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து மோப்ப நாயும் பள்ளிப்பட்டு சாலை, தாங்கல் பகுதியில் நின்றுவிட்டது.

போலீசாரின் விசாரணையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பழனியின் மகன் டாக்டர் சாய்கணேஷுக்கு திருமணம் நடந்தபோது, பெண் வீட்டார் சார்பில் 60 சவரன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பணத்தை சீதனமாக வழங்கியுள்ளனர். இதுதவிர, பழனி வீட்டினரின் நகைகளுடன் பீரோவில் 98 சவரன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது. இப்புகாரின்பேரில் பள்ளிப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.