சென்னை: உங்கள் அடக்குமுறை எங்கள் மக்கள் பணிகளை ஒரு நாளும் தடுக்காது என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; விவசாயிகளின் துயர் துடைக்க வக்கற்ற #SofaModel அரசு, பிரச்சினைகளை திசைதிருப்புவதற்காக என்னை கைது செய்திருக்கிறது. தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் தேவையற்ற வார்த்தைகளை நான் பயன்படுத்தியதாக ஆளுங்கட்சியின் Abusive warriors-ஐ வைத்து என் மீது அவதூறு பரப்பினார்கள்.
பொய் வழக்குகளைப்பதிவுச் செய்து சென்னையில் இருந்து தஞ்சைக்கு அலைக்கழிப்பதாக நினைத்து, யாரையோ திருப்திப்படுத்த முயன்றிருக்கிறார்கள். என்னைக் கைது செய்ததும் மீடியாவைப் பார்த்து, இந்தக் கைதை காமடியாகப் பார்க்கிறேன் என்று கூறிவிட்டுத்தான் வந்தேன். போலீஸைப் பார்த்து பயந்து ஓடிப்போய் விடவில்லை. ஆனால் இன்றைய முதலமைச்சர் கரூரில் 41 பேர் இறந்தபோதும் அவர்கள் குடும்பத்தாரையும் பார்க்காமல், மீடியாவையும் பார்க்காமல் கைது செய்து விடுவார்களோ என்று அச்சத்தில் தலைதெறிக்க ஓடியதை நாடறியும்.
கரூரில் அத்தனை உயிர்கள் பலியான போதும் - அடுத்த ஒரு மாதத்தில் பட விளம்பரத்துக்காக மலேசியா போய் குத்தாட்டம் போட்டவர்தான் இவர். முதலமைச்சர் வேண்டுமானால் கைதுக்கு பயப்படலாம். நான் அதற்கெல்லாம் அஞ்சமாட்டேன். நான் கலைஞரின் பேரன். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் மகன். விவசாயிகளுக்காகப் போராடி கைதாவது என்றால், ஒருமுறை அல்ல 100 முறை கூட கைதாவேன். விவசாயிகளின் நலனுக்காக 300 கிலோ மீட்டர் அல்ல 3000 கிலோமீட்டருக்கு மேல் அழைத்துச் சென்றாலும், நான் செல்லத்தயார். உங்கள் அடக்குமுறை எங்கள் மக்கள் பணிகளை ஒரு நாளும் தடுக்காது.
என்னுடைய கைதை கண்டித்த தோழமை இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், தமிழ்நாடு முழுவதும் எனக்கு ஆதரவாக ஒற்றுமையை வெளிப்படுத்திய தொண்டர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


