Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

என்னது மீண்டும் ரீ என்ட்ரீ தர்றாங்களா? வேலைக்கு போயிட்டு 3 வருஷம் நின்னுட்டு மறுபடியும் வருவதா? சசிகலா, ஓபிஎஸ்சை கலாய்த்த எடப்பாடி

தஞ்சாவூர்: அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று கூறிய சசிகலா, ஓபிஎஸ்சை எடப்பாடி கலாய்த்து பேட்டி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் தனியார் விடுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: என்னது சசிகலா ரீ என்ட்ரியா? வேலைக்கு போறதா? இன்னிக்கு வேலைக்கு போயிட்டு 3 வருஷம் நின்னுட்டு மறுபடியும் வேலைக்கு சேர்ந்துக்கறதா? பொது வாழ்வில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு இப்போ ரீ என்டரினு சொல்றாங்க?. இப்போதுதான் கட்சியை காப்பாற்ற போறாரா? இத்தனை நாள் கட்சியை காப்பாற்றியது யாரு? தொண்டன்.

அதிமுகவுக்கும், சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஜெயலலிதா தனி அணியாக சேவல் சின்னத்தில் போட்டியிட்டபோது, ஜானகி அணியில் போட்டியிட்ட வெண்ணிற ஆடை நிர்மலாவிற்கு தலைமை தேர்தல் ஏஜென்டாக இருந்தவர் ஓபிஎஸ். எனது தலைமையில் நடந்த அதிமுக ஆட்சிக்கு எதிராக சட்டமன்றத்தில் வாக்களித்தவர் ஓபிஎஸ். தொடர்ந்து அதிமுகவிற்கு துரோகம் செய்து வரும் ஓபிஎஸ்சை எப்படி கட்சியில் சேர்க்க முடியும்?. கட்சிக்கு யார் துரோகம் செய்தாலும் ஓபிஎஸ்சின் நிலை தான் ஏற்படும். ஓபிஎஸ் பலாப்பழத்தை வைத்து பூஜை செய்து எப்படியாவது வெற்றி பெற்று ஒன்றிய அமைச்சராகி விடலாம் என கனவு கண்டார். ஆனால் மக்கள் அவருக்கு சரியான தண்டனை கொடுத்துள்ளனர்.

ஓபிஎஸ் எப்போதுமே அதிமுகவிற்கு விசுவாசமாக இருந்தது கிடையாது. எதிராகத்தான் இருந்துள்ளார். 1989ம் ஆண்டு சேவல் சின்னத்தில் போடிநாயக்கனூரில் ஜெயலலிதா போட்டியிட்டபோது அவருக்கு எதிராக பூத் தலைமை ஏஜென்டாக செயல்பட்டவர்தான் இந்த ஓபிஎஸ். இப்போதும் அவர் இரட்டை இலைக்கு எதிராக தேர்தலில் நின்றுதான் தோல்வியை கண்டுள்ளார். செல்லூர் ராஜு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியது தவறானது அல்ல. யார் யாருக்கு வேண்டுமானாலும் பிறந்தநாள் வாழ்த்து கூறலாம். 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து அதிமுக அரசு தனி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.