நாக்பூர்: ரஞ்சி கோப்பை காலிறுதியில் நேற்று தமிழகத்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் விதர்பா அணி 6 விக்கெட் இழப்புக்கு 264 ரன் குவித்தது. நாக்பூரில் நேற்று நடந்த ரஞ்சி கோப்பை காலிறுதி டெஸ்ட் போட்டி ஒன்றில் தமிழகம் - விதர்பா அணிகள் மோதின. டாஸ் வென்ற விதர்பா பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர் அதர்வா தெய்தே ரன் எடுக்காமலும், துருவ் ஷோரி 26 ரன்னிலும் அவுட்டாகினர். ஆதித்ய தாக்கரே 5 ரன்னில் வீழ்ந்தார்.
இருப்பினும் டேனிஸ் மலேஸ்வர், கருண் நாயர் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர். டேனிஸ் 75 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். நேற்றைய போட்டி முடிவில் விதர்பா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 264 ரன் எடுத்தது. அந்த அணியின் கருண் நாயர் அற்புதமாக ஆடி சதம் அடித்து அவுட்டாகாமல் களத்தில் உள்ளார். தமிழகம் தரப்பில் விஜய் சங்கர் 2, முகம்மது, சோனு யாதவ், அஜித் ராம், முகம்மது அலி தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இன்று 2ம் நாள் ஆட்டம் தொடர்கிறது.
விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டிகளில் கடந்த மாதம் ஆடிய கருண் நாயர், 5 போட்டிகளில் அவுட்டாகாமல் 542 ரன் குவித்து உலக சாதனை படைத்திருந்தார். அவரது சாதனை ஓட்டத்தை அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், தற்போது ரஞ்சி கோப்பை காலிறுதியில் விதர்பா அணிக்காக சதம் அடித்து தன் ஆட்டத்திறனை அவர் மீண்டும் நிரூபித்துள்ளார்.

